Thursday 14 September 2017

இதனால் சகலவிதமான ஆண்களுக்கும் நான் தெரிவிப்பது என்னவென்றால்....

இதனால் சகலவிதமான ஆண்களுக்கும் நான் தெரிவிப்பது என்னவென்றால்....

அன்று ஒரு வியாழக்கிழமை...
பள்ளியில் ஐந்தாவது பிரியட் முடிந்து ஆறாவது பிரியட் தொடங்க வேண்டும்.அன்று வர வேண்டிய வகுப்பின் ஆசிரியர் விடுப்பு எடுத்திருந்ததால் வரவில்லை..
வகுப்பில் ஆசிரியர் இருந்தாலே கும்மாளம்.போடும் நாங்கள் அவர் வரவில்லை என்றவுடன்...அவரவர் வால்தனங்களை அவிழ்த்து விட்டுப் பிரபலமாகிக் கொண்டிருந்தோம்..

முதலில் ரேஷ்மா தான் ஆரம்பித்தாள்.தினமும் பள்ளிக்கு வந்து போரடிக்குது நாளைக்கு லீவ் போடலாமா என்றாள். உடனே கீர்த்தி.சரண்யா.மதுமிதா.காயத்திரி.கரிஷ்மா அனைவரும் ஒத்து ஊதினர். எல்லோரும் மொத்தமாக லீவ் போட்டால் சந்தேகம் வரும் என்றாள் நஃபிதா. 

பிறகு ஆளாளுக்கு பேசிவிட்டு லீவ் எல்லாம் போடமுடியாது.பிரச்சினை வரும் என்று ஒரு மனதாக முடிவு செய்யப்பட்டு, ஆதங்கத்தோடு அடுத்த பிரியட். ஐ எதிர் கொள்ள ஆரம்பித்தார்கள். எனக்குள் அந்த லீவ் மேட்டர் மீண்டும் மீண்டும் மனதிற்குள் ஓடிக் கொண்டே இருந்தது. நாளை வெள்ளிக் கிழமை தான் ஒரு நாள் லீவ் போட்டால் சனி.ஞாயிறு.சேர்ந்து கிடைக்கும். ஜெம ஜாலி என்று தோன்றியது. ஆனால் ச்ச்ச்சும்மா லீவ் போடுகிறேன் என்றால் எப்படி.அனுமதிப்பார்கள்? அதனால் அதற்கென ஒரு திட்டம் தயாரிக்க ஆரம்பித்தேன். அம்மாவிற்கு வயிற்று வலி வருவதுண்டு. அப்போது தாங்க இயலாமல் தவிப்பாள். புரளுவாள். வேக வேகமாக சமைத்து முடித்து விட்டு குப்புறப்படுத்துக் கொள்வாள். அடிக்கடி கழிப்பறை சென்று வேதனை முகத்தோடு திரும்புவாள். 
எஸ்.
இந்தத்திட்டம் தான் சரியானது என்று மனதிற்குத் தோன்றியது.
பள்ளியிலிருந்து கிளம்பும் போதே முகத்தை உர் என்று வைத்துக் கொண்டேன். வீடு வந்ததும் கண்ணாடி முன் நின்று சோகமாக முகத்தைப்வைக்க முயற்சி செய்து பழகிக் கொண்டேன். என் முகத்தைக் காண எனக்கே பாவமாய் தோன்றும் அளவிற்கு " பர்மாமன்ஸ்" சரியாக இருந்தது..

அம்மா வந்தவுடன் வயிறு வலிப்பதாய் சொன்னேன். " சாப்பிடு ,சரியாப்போகும்..அடக்கடவுளே! இவளுக்கு இன்னும்.பசிக்குதுனுப்கூடச் சொல்லத் தெரியலை" என்று தலையில் அடித்துக் கொண்டே சென்றாள். மீண்டும்.கண்ணாடி முன் போய்..வலிக்கு பதில் பசியைக் காண்பிச்சுட்டோமோப்..அடடா...சூர்யா இன்னும் நடிப்புக் கலையில் தேறணும்னு சொல்லிக் கொண்டே என் நடிப்பு நாடகத்தைத் தொடர்ந்தேன்..

மறுநாள் அம்மா பள்ளிக்குக் கிளம்பும் வேளையில் மீண்டும் என் வலி பற்றி சொல்லி ஞாபகப் படுத்தினேன். அம்மா முதலில் என் வகுப்பாசிரியருக்கு போன் செய்தாள்.(.அப்பாடா லீவ் சொல்லப் போகிறாள். இனி ஜாலி என்று நினைத்தேன். )

என் பள்ளி ஆசிரியர்களுக்கு,,என் தோழிகளின் அம்மாக்களுக்கும்.தோழிகளுக்கும். தனது தோழிகளுக்கு என்று எனக்கு உடல்நலம் சரியில்லை என்ற செய்தி பரப்பப்பட்டது. கிட்டத்தட்ட அம்மா சிங்கப்பூர் வானொலிக்கு மட்டும் தான் சொல்லவில்லை. சரி எப்படியோ லீவ் கிடைச்சா சரி என்று பார்த்தால் அம்மா யூனிபார்ம் போடச் சொன்னாள்..நான் பள்ளிக்குப் போகிறேனாம்மா என்றேன் பரிதாபமாய்.இல்லை கொஞ்ச நேரம் தான் நான் வரும் வழியில் உன்னைக் கூட்டிவந்து  விடுகிறேன் என்றாள். சரினு நம்பி அவளோடு வண்டியில் ஏறினேன். வகுப்புக்குச் சென்றேன். முதல் பிரிவேளை வந்த தமிழ் அம்மா. ராகசூர்யா உனக்கு என்ன முடியலை..அம்மா.போன்.பண்ணாங்க என்று சொல்லிவிட்டு..என் பதில் எதிர்பார்க்காமல் அவங்க பாட்டுக்கு பாடம் நடத்துனாங்க..அடுத்த பிரிவேளை வந்த வேதியியல் ஆசிரியையும் சூர்யா உனக்கு முடியலையாமே உங்க அம்மா சொன்னாங்க என்று சொல்லிவிட்டு அதன் பின் மருந்துக்குக் கூட அதைப் பற்றி விசாரிக்காமல் பாடமே கண்ணாக நடத்திவிட்டு அவரும் சென்று விட..அடுத்து அடுத்து வந்த ஆசிரியர்கள் அனைவரும் ஏதோ பிள்ளையார் சுழி போட்டு தொடங்குவது போல உனக்கு முடியலையாமே என்று கேட்டுவிட்டு தங்களின் கடமைகளை ஆற்றினார்கள்.வகுப்புக்குள் வந்த ஆசிரியர் மட்டுமின்றி வகுப்பு வழியா போற ஆசிரியர்களும் ஏதோ மந்திரிச்சு விட்டா மாதிரி கேட்டுட்டு என்னிடமிருந்து பதில் வாங்காமலே சென்றார்கள். நேரம் தான் போனதே தவிர வரேனு சொன்ன அம்மா வரலை. 

இதற்குள் நந்தினி.பிறந்தநாள் என்பதால் அவள் அம்மா மற்ற குழந்தைகளுக்கு சாதாரண சாக்லேட்டும் எனக்கு மட்டும் டெய்ரி மில்க் சில்க் ம் கொடுத்துவிட அவள் பயந்து போய் உனக்கு வயிற்று வலியே..உடம்பு சரி இல்லையே..நீ சாப்பிடலாமா என்று கேட்டு வெறுப்பேற்றினாள்.நந்தினி அம்மாவும் என் அம்மாவும் ஒன்றாய் வேலை பார்த்தவர்கள் என்பதால் மதிய வேளையில் அவள் மாமாவிடம் ஐஸ்கிரீம் கொடுத்துவிடுவதாகவும் சொன்னார்களாம்.

மதியம் உணவு இடைவேளையின் போது அம்மாவின், தோழியின், தம்பியின், மனைவியின்,, அண்ணன் மகள் என்னை வந்து உனக்கு வயித்து வலியா?? உங்கம்மா போன் பண்ணாங்க என்று குசலம் விசாரித்து விட்டுப் போனாள். 

அடக்கடவுளே! இனி பாரதப் பிரதமரும், அமெரிக்க அதிபரும் தான் என்னை விசாரிக்கவில்லை. சே,,,,நான் இந்த நாடகம் நடிக்காமலேயே இருந்திருக்கலாம். இப்படி எல்லோரும் என்னை விசாரிக்க..விசாரிக்க,,,அம்மா மீது கோபம் கோபமாக வந்தது.. இன்று வீட்டுக்குப் போனதும் மிக பயங்கரமாக ..மிக மிக.பயங்கரமாக அம்மா மீது கோபப் பட வேண்டும் என்று அம்மா மீது சத்தியம் செய்து கொண்டேன்.

மதியம் வந்த ஒரு ஸ்ப்ஸ்டியூட் மிஸ் என்ன ராகசூர்யா உனக்கு முடியலையாமே...உனக்காக ரசம் சாதம் செய்து எடுத்து வரச் சொன்னேன்...சாப்டுறியா என்று கேட்டு என்னை கோபத்தின் உச்சிக்கு கொண்டு சென்றாள்.

இந்தக் கேள்விக் கணைகள் பத்தாது என்று இல்லாத வயிற்று வலியை இருப்பதாகக் காட்டிக் கொள்ள ஒரு அசாதாரண திறமை தேவைப் பட்டது. என்னால் மெயிண்டென் செய்ய முடியாது என்ற நிலையை நான் எட்டி விட்டேன்.

வருகைப் பதிவு 75% இருந்தால் போதும். நானோ 98% வைத்திருக்கிறேன். ஒரு நாள் லீவ் போட்டால் குறைந்தா போகும்..
ஆசிரியரான அம்மாவுக்கே லீவ் செயல்முறைகள் தெரியவில்லையோ என்று நொந்து கொண்டேன்.

பள்ளியை விட்டுக் கிளம்பும் போது வாசலில் நின்ற வாட்ச் மேன் உனக்கு உடம்பு சரியில்லையா பாப்பா என்றாள். கரிசனத்தோடு...பள்ளியைக் கூட்டும் ஆயா..கூட்டுவதை நிப்பாட்டி நிமிர்ந்து உனக்கு உடம்பு சரி இல்லையா என்றாள். மாலை நான் வரும் வேன் டிரைவர் என்னோடு வரும் வேறு வகுப்பு தோழிகள் எல்லோரும் கேட்டார்கள்..

கோபத்தோடு கதவைத் திறந்தால் வீடெல்லாம் நெய் மணம்..மற்றும் எனக்கு புரிபடாத பற்பல மணங்கள்... பையை கீழே வைத்து விட்டு அடுப்படிக்குப் போனால் ஒரு கிண்ணம் நிறைய பால் பாயாசம். பக்கத்தில் வடை..ஒரு வாளியில் முறுக்கு...வந்த கோபம் எல்லாம் டஸ்ஸ்...புஸ்ஸ்...

அம்மாவுக்கு அன்று தலைமை ஆசிரியர் கூட்டமாம். மதியமே வீடு வந்து விட்டாளாம். எப்போதும் தலைமை ஆசிரியர் கூட்டமென்றால் காலை பள்ளியும் சென்று.. மதியம் கூட்டமும் போய்விட்டு வந்தால் அம்மா சாதாரணமாக பால் சாதம்.துவையல் அப்பளம் இதோடு முடித்துக் கொள்வாள்.களைப்பாகத் தென்படுவாள்..ஆனால் அன்று காலை கூட்டம் என்பதால் இரண்டு மணிக்கே வந்துவிட்டதால் இதை எல்லாம் செய்ய முடிந்ததாம்.

ஹைய்யயே...கோபமாவது ஒண்ணாவது..

வழக்கமாக 4 வடைகள் மட்டுமே தரும் அம்மா அன்று ஆறு வடைகள் தந்தாள். 10 முறுக்கு தந்தாள்.. 

உங்களுக்குத் தெரியுமா? அம்மா ரொம்ப பாவம்..ரொம்ப நல்லவள்...

பின்குறிப்பு....இதனால் சகலமானவர்களுக்கும் நான் அறிவிப்பது என்னவென்றால்(1) தயவு செய்து டீச்சர் பெண்ணை திருமணம் செய்யாதீர்கள். ( அவர்கள் தங்கள் குழந்தைகளை லீவ் எடுக்க அனுமதிப்பது இல்லை)

அதோடு உங்கள் குழந்தை படிக்கும் பள்ளியின் ஆயாவிலிருந்து பிரின்சிபல் வரை அனைவரும் தெரிந்தவர்களாய் இருப்பார்கள். அது அதைவிடத் தொல்லை.
ஒரு வேளை என் பேச்சை மீறி திருமணம் செய்யத் துணிந்தால் உங்களுக்குப்பிறக்கும் குழந்தைகள் லீவ் எடுக்க அனுமதி உண்டா என்று கேட்டு முதலிலேயே ஒப்புதலும் பெற்று.ஒப்பந்தமும் போட்டுக் கொள்ளுங்கள்.

ஏனென்றால் மாணவர்களைப் பார்த்து..பார்த்து யார் பொய் லீவ் போடுகிறார்கள் என்பதை அறிந்து கொண்டு விடுகிறார்கள்..உளவியலாளர்கள் போல....

இந்த அவஸ்தை உங்களுக்கும் நேரலாம்...

என்ன நான் சொல்றது?

மற்றொரு பின் குறிப்பு. மறுநாள் வகுப்பாசிரியர் என் வகுப்பு வந்ததும் என்ன சூர்யா சரியாகிட்டியா என்று சாதாரணமாகக் கேட்டிருந்தாலும் குத்தலாகக் கேட்டதாகவே இன்று வரை உணர்கிறேன்

8 comments:

  1. அட சின்னவளாகிப் போனேன்...நான்...

    ReplyDelete
  2. அட சின்னவளாகிப் போனேன்...நான்...

    ReplyDelete
  3. ஹா... ஹா... ஹா...
    வாட்ச் மேன், ஆயா வெல்லாம் கேட்டதைப் படித்ததும் சிரித்து விட்டேன்.
    உண்மைதான் டீச்சர் அம்மாக்கள் / அப்பாக்கள் இருத்தல் சும்மா விடுமுறைகள் எடுப்பதில் பெரிய சிக்கலே...
    என்ன அழகான நடை...
    வாழ்த்துக்கள். தொடர்ந்து எழுதுங்கள்...

    ReplyDelete
  4. //தயவு செய்து டீச்சர் பெண்ணை திருமணம் செய்யாதீர்கள்//

    யோசிக்கணும்

    ReplyDelete