Tuesday 29 December 2015

நான் தான்...இது நான் தான்

இதுவரை நான் படித்த பள்ளிகளில் எல்லா விழாக்களும் நடக்கும். எல்லா விழாக்களிலும் என் பங்களிப்பு இருக்கும்..

எப்படி?

என் வெள்ளை நிறம், அல்லது புற அழகு மட்டுமே எடை பார்க்கப் பட்டு அலங்கார பதுமை போல், நிகழ்வுகளில் கலந்து கொள்ள வரும் பெரிய முக்கியப் புள்ளிகளுக்கு பள்ளி முதல் வர் அல்லது தாளாளர் கொடுக்க வேண்டிய நினைவுப் பரிசுகள், மாணவர்களுகான பரிசுகளை மேடைக்கு அழகான ஒரு டிரேயில் வைத்து எடுத்துச் செல்வேன்..

அல்லது வரவேற்பு கொடுக்க ஒரு பூச்செண்டுடன் நிற்க வைக்கப்படுவேன்`

சில ஆண்டுகளில் நான் இந்த ஆண்டு விழாக்களையும் என் பதுமை வேஷத்தையும் புறக்கணிக்க ஆரம்பித்தேன்.

இந்தப் பள்ளிக்கு வந்தபின் முதலில் ஒரு பேச்சுப்போட்டியில் கலந்து கொண்டேன்..பேச்சுக்கான கருத்துக்களை நானே தான் தயாரித்தேன்.கொஞ்சம் சின்னப்பிள்ளைத்தனமாக இருந்தாலும் என் உழைப்பாக இருக்க வேண்டும் என்றே விரும்பினேன்(.அம்மா தலைப்பு கேட்ட உடன் எழுதித்தந்ததை இன்னும் நான் பார்க்கவில்லை.)அதில் முதல் சுற்றில் தேர்வு பெற்றேன். இரண்டாம் சுற்றில் பசி மயக்கத்தால் இழந்தேன்..( உண்மைக்காரணம் அது தான். என் கருத்துக்கள் பெரியவர்கள் எழுதித் தந்து மனப்பாடம் செய்யப் பட்டு வந்ததை விட நன்றாக இருந்ததாக அம்மாவிடமே அந்த நிகழ்ச்சியின் அமைப்பாளர் தெரிவித்தார்.)

அதன் பின் என் தமிழ் இவர்களுக்குப் பிடித்துப் போக பேச்சுப் போட்டி அல்லது பேச்சு என்றாலே கூப்பிடு ராகசூர்யாவை என்ற அளவுக்கு உடனடியாக தயாரிக்க ஆரம்பித்தேன். (அப்துல் கலாம் அய்யாவிற்கு நினைவஞ்சலி கூட்டத்தில் உடனடியாக தயாரித்துப் பேசியது தான் எனக்கு நானே கொடுத்துக் கொண்ட பாராட்டு. அதில் நான் தேர்வாகவில்லை என்றாலும் அது உடனடியாக ( காலை 10 க்கு சொல்லப்பட்டு 11 மணிக்கு மேடையில் நிறுத்தப்பட்டேன்)

 என் கருத்துக்கள் நன்று என்றாலும் நயம், அன்றைக்கு கலந்து கொண்டோர்களோடு ஒப்பிடும் போது நான் சுமார்தான் என்றாலும் எல்லோருக்கும் தயாரித்தது தாத்தா, அப்பா, அம்மா, என்று பல பெரியவர்கள். ( முதல் நாளே தெரிவித்திருந்தும் நான் கலந்து கொள்ள வேண்டாம் என்று நினைக்க என் வகுப்பு ஆசிரியரின் கட்டாயத்தால் கலந்து கொண்டேன்.)

என் திறமைக்காக நான் மேடை ஏற வேண்டும் என்று நினைத்தது நடந்திருக்கிறது..

என் பள்ளியின்( SPORTS DAY ) விளையாட்டு தினத்தில், பிரம்மபுத்திரா அணியின் நிகழ்ச்சி தொகுப்பு நான் தான். இப்போதும் எனக்கு கருப்பு நிறச் சுடிதார் கொஞ்சம் கிராண்டாக அணிந்து வரச் சொல்லப்பட்டது என்றாலும், இப்போது பிடித்து அதனைச் செய்தேன்..


( முன்பொரு முறை நான் கருப்பு நிற ஆடை அணிந்த போது  கீழே விழுந்து ரத்த காயம் ஏற்பட்டு விட , அதன் பின் கருப்பு நிறம் என்றாலே அம்மா அலறி அடித்து எனக்கு வாங்கவே கூடாது என்று சொல்லி விட, அந்தத் தடையும் அகன்றது, இந்தத் திருநாளில்..)

அந்த விளையாட்டுத் திடல் எங்கும் என் குரல்

அங்கு வந்திருந்த அனைவரின் காதிலும் என் குரல்..அழகிய தமிழில்..

பேச்சாளராக மட்டும் இல்லை. நான் என் எழுத்தாலும் ஒரு நிகழ்வை எடுத்துச் சொல்லும் முறையிலும் வெற்றி பெற முடியும் என்றும் உணர்ந்த தருணம் இது...

முயற்சிகள் பலிக்க வேண்டும் என்பதை விட என் முடிவுகளில் நானாகவே செயல்பட வேண்டும் என்று விரும்புகிறேன்..அவ்வாறே நடக்க உங்கள் வாழ்த்தையும் ஆசியையும் தாங்களேன்.( மற்றதை நானே பார்த்துக் கொள்கிறேன்.)
****************************************************************************


இங்கு நான் சக்தியின் தங்கை இல்லை..

எந்தத் தோழியும் என்னை நீ சக்தி தங்கையா எனக் கேட்பதில்லை.

நீ கவிஞர் சுவாதி பொண்ணா?? என்று எந்த ஆசிரியரும் கேட்கவில்லை.

எனவே இந்தப் புகழ் எல்லாம் என் முயற்சியினால் மட்டுமே விளைந்தது..எல்லாப் புகழும் சூர்யாவுக்கே...சரி..சரி இறைவனுக்கே)

இவர்கள் எனக்கு அன்பானவர்களாக இருக்கலாம்.என் வாழ்வின் அங்கமானவர்களாக இருக்கலாம்.

.ஆனால் எனது அடையாளமே இவர்களாக இருக்கக்கூடாது..அப்படித்தானே????

இங்கு என் சுயம் வெளிப்பட்டிருக்கிறது. நான் நானாக பாவிக்கப் பட்டிருக்கிறேன்,
முற்றிலும் இந்த வாய்ப்பு என் கனிவான தமிழ் உச்சரிப்பாலும், கம்பீரமான பேச்சாலும், தெளிவான நடையாலும் கிடைத்தது.( இவ்வள்வும் இருக்கான்னு நீங்க கேட்கிறது புரியுது.  ஏதோ பச்சப்புள்ள சொல்லிட்டுப் போறேனே..)


(முத்துநிலவன் அங்கிள் மன்னிக்க)
**************************************************************************


எனக்குள் நான். ஒரு தத்துவம்...( இது தான் இன்றையத் தத்துவம்)
***********************************************************************

Friday 25 December 2015

சக்தி என்ற சகாயம் ஐ.ஏ.எஸ்

எல்லோருக்கும் அக்கா, அண்ணா, எப்படி இருப்பாங்க என்ன மாதிரி நடந்துக்குவாங்கன்னு தெரியலை..

அடுத்த பதிவும் அவளைப்பற்றியது தான் என்பதால் இதஅவளைப்பற்றி...ஒரு சில வார்த்தைகளில்...

எனக்கு இவள் தான் இரண்டாம் தாய் என்றால், அது அப்படியே உண்மை. பள்ளியில் உணவு இடைவேளையில் வந்து பார்ப்பாள்.

என் ஆடைகளுக்கு பொருத்தமாக இவள் தான் அணிகலன்கள் தேர்ந்தெடுப்பாள்.  

காய்ச்சல் வந்தால் பெரும்பான்மையான நேரங்களில் மாத்திரை கொடுப்பதும் இவளே

பாடங்களில் ஏற்படும் சந்தேகங்களுக்கு இவள் தான் எனக்கு டியூஷன் டீச்சர்.

பள்ளியில் இவள் தங்கை என்றே நான் அடையாளப்படுத்தப்படுவேன்.(.இவள் மாணவர்கள் தலைவர்)  எங்கள் ஃபாதருக்கு(பள்ளி முதல்வர்)  மிகவும் பிடித்தமான மாணவி.

வகுப்பு ஆசிரியர்கள் எல்லாம் இவள் புகழ் பாடுவதில் வல்லவர்கள்..(எல்லோருக்கும் சாக்லேட் வாங்கிக் கொடுத்து கரெக்ட் பண்ணியிருப்பாளோ என்ற சந்தேகம் இன்னும் உண்டு.)

இவள் தங்கை எனப்பட்டதால் அவளைப் போலவே நானும் நிறைய மதிப்பெண்கள் வாங்குவேன் என்று, சேட்டையே செய்யமாட்டேன் என்றும், பாடத்தில் கருமமே கண்ணாயிருப்பேன் என்றும் அவர்களாகவே கணக்குப் போட்டுக் கொண்டார்கள். பாவம்.  ( இந்த டார்ச்சர் தாங்க முடியாமல் படித்து, அப்புறம் நல்ல பிள்ளை போல நடித்து...அடடா..)( நல்ல பெயர் வாங்கிட்டோம்ல)                                                                                                                                                    

* காய்ச்சல் வந்தால் அம்மா கஷாயம் போட்டுத் தந்தால் , அம்மா சொல்படி கேட்டு அப்படியே அந்தக் கண்றாவியை..அய்யோ டங்கு சிலிப் ஆய்டுச்சு..அந்த கஷாயத்தைக் குடிப்பவள்

* இத்தனைக்கு மணிக்குத் தூங்கு என்று அம்மா சொல்லிப் போனால் அந்தக் கடிகாரத்தின் முள் கூட சற்று மாறுபடும். இவள் வாக்குத் தவறாதவள்..அந்த அளவுக்கு நாணயஸ்த்தி.

*அதே போல் பல் விளக்கி விட்டே காப்பி குடிக்கும் பழக்கத்தையும், குளித்து விட்டே சாப்பிடும் பழக்கத்தையும் அநியாயமாய் கடைபிடிப்பவள்.( நாமும் அப்படித்தான் இருக்க வேண்டும் என்றும் வாதிடுபவள்..)



*சரியான அம்மாகோண்டு...அப்பாவே தப்பித் தவறி ஹோட்டலுக்குக் கூட்டிப் போனாலும், டிஃபன் ஆர்டர் கொடுக்கச் சொன்னால், ஏதாவது கோபி மஞ்சூரியன், கைமா புரோட்டோ என்று அவள் நாக்கு கேட்டாலும் அம்மாவைத் தான் பார்ப்பாள்..( நான் இது போன்ற சமயங்களில் அம்மா முகத்தைப் பார்ப்பதையே தவிர்த்து விடுவேன்) ( அவளுக்கு அப்படி ஒரு பயம் என்றால் எனக்கு இப்படி ஒரு பயம்..இதுவும் பயம் வகையில சேத்துக்கலாம் தப்பில்லை..
இதனை இத்தோடு விட்டு விடுகிறேன்..

ஒருநாள் ஏதோ ஒரு வகையில் ஒரு வாக்கு வாதம் ஏற்பட, வகையாக அவளிடம் மாட்டிக் கொண்டேன்..

தொல் பொருள் ஆய்வாளர்கள் அவள் தலைமையின் கீழ் இயங்கினால் மிகச் சரியாகவும் , நேர்த்தியாகவும் , செயல்படலாம் என்ற அளவுக்கு, நான் முன்னால் செய்த தப்பு, அதற்கு முன்னால் செய்தது என்று அனைத்தையும் சொல்லுவாள்..(இவளை விட்டால் நான் அம்மாவுக்குள் இருக்கும் போது ஏதாவது செய்திருந்தால் அதனையும் கூடச் சொல்லக்கூடும்)

நான் என்ன செய்திருப்பேன்..தேர்வு நேரங்களில் கதை புத்தகங்கள் படித்திருப்பேன். கம்ப்யூட்டர் கேம்ஸ் விளையாடுவேன்..

அம்மாவிடம் எளிதாக சாதித்து விடலாம் என்றால், இவளிடம் அனுமதி வாங்குவதற்குள் எனக்கு நாலு டின் ஹார்லிக்ஸ் குடிக்க வேண்டும்..(ஆனால் அம்மா எப்பவும் சக்தியிடம் ஒரு வார்த்தை சொல்லிட்டு செய் நு சொல்லும் போது, அய்யய்யோ...அவள் எல்லாத்தையும் துருவி துருவி கேட்பாளே..ஆனா பாருங்க..அவ படிக்கும் போது எந்த விஷயம் கேட்டாலும் ஓகே ஆயிடும்..ஏன்னா மேடம் படிப்புல சின்சியர்..அதனால அந்த நேரத்தை வீணாக்க மாட்டாங்க...நான் பல நாளா இப்படித்தான் அவளைக் கரெக்ட் பண்ணி..கம்ப்யூட்டர் கேம்ஸ் விளையாடுறது. மாடில உலவுறது,கதை புத்தகம் படிக்கிறது இப்படி பற்பல விஷயங்கள் செய்துகிட்டு இருக்கேன்..) ( இதைப்படிப்பவர்கள் இந்த உண்மையை அவளிடம் சொல்லிவிட வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன்..)

ஆனால் இவள் அதைக் கூட அம்மாவிடம் அனுமதி கேட்டு அங்கிருந்து ஒப்புதல் வந்த பிறகே செய்யும் பழக்கம் கொண்டவள்.அதுவும் இல்லாமல் தேர்வு நேரத்தில் பாடத்தைத் தவிர ஒன்றும் படிக்க மாட்டாள்...அவள் வகுப்பில் இவள் ஒரு மார்க் குறைந்தால் கூட குய்யோ முறையோ என்று நான் எப்படி? எப்படீ இப்படி ஆச்சு என்று 98 மார்க் வாங்கும் போதும் புலம்புவாள்..

இன்று கல்லூரி வைத்த தேர்வில்(கல்லூரி அளவில்) முதல் மதிப்பெண்கள் வாங்கியிருக்கிறாள். இவள் ஆசை , லட்சியம், எல்லாம் ஒரு பெரிய ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆக வேண்டும் என்பது தான். நிச்சயம் ஆவாள். அவள் ஆசையில் எனக்கும் பங்கு உண்டு.

அவளை வாழ்த்தவே இந்தப்பதிவு. காய்ச்சலோடும் கவனமாக படிக்கும் அவளை வாழ்த்துங்களேன்..

Monday 14 December 2015

மீண்டும் மீண்டும் பள்ளி...மீண்ட பள்ளி..

இன்று முதல் பள்ளி மீண்டும் துவங்கியது..

நேற்று முதல் தூக்கம் பிடிக்கவில்லை..அது வேதனையா? மகிழ்வா? ஏதும் தெரியலை..ஆனால் ஏதோ மாதிரி..

வாசலில் நின்ற வாச்மென்..போங்க, போங்க,,,எல்லோருக்கும் சாக்லேட் இருக்கு என்றார்..

(அய் மழை பெஞ்சு திரும்பி பள்ளிக்கூடம் வந்தா இந்த ஊர் ஸ்கூல்ல சாக்லேட் தருவாங்களா??நல்ல ஸ்கூலா இருக்கேனு நம்பி.. போனேன்)

இன்று வெள்ளை நிற சீருடை என்பதால், எல்லோருமே புதியதாய் போட்டு வந்திருந்தோம்..( அழுக்காக்கிட்டு வந்து,  கிழிச்சிட்டு வந்து ,புதுசா ஒரு யூனிபார்ம் எடுத்துக் கொடுங்கனு சொன்னா, என்ன சொல்லியிருப்பாங்க இந்தப் பெற்றோர்கள்???இன்னும் ஒரு மாதம் தானே? அவ்வளவு சாக்கு சொல்லி வாங்கித் தராம இருக்க ஆயிரம் பொய் சொல்வாங்க...இப்ப கடவுளே வாங்க வச்சிட்டார்...)

போன உடன் கணக்கெடுப்பு நடந்தது அலுவலகம் வழியாகவும், எங்கள் தோழிகள் மூலமாகவும், யாருக்கெல்லாம் புத்தகங்கள் இல்லை. நிர்வாகமே புத்தகம் தரப்போறாங்களாம்..

இவ்வளவு ரண களத்திலேயும் பாட்னி மிஸ் கேட்டாங்க பாருங்க ஒரு கேள்வி..எல்லாரும் ரெக்கார்ட் நோட்டு முடிச்சிட்டீங்களா   ன்னு???

கீழே பள்ளியின் அலுவலக அறையெல்லாம் போச்சாம்..பல பதிவேடுகள்..இனி கணினி வாங்கி அவ்வளவும் ஏற்றப்படவேண்டும் என்று பேசிக்கொண்டார்கள்``

என் வகுப்பறைகளில் எல்லாம் சில மீன்கள் பூச்சிகள், என்று ஏதேதோ..

முதல் தளம் வரை இருந்த பெஞ்ச் எல்லாமே துருப்பிடித்து, அலங்கோலமாகக் கிடந்தது..

இயற்பியல், வேதியல், ரெக்கார்ட் நோட் வைக்காதவர்கள் கூட ஏற்கனவே வைத்து விட்டதாகப் பீற்றிக் கொண்டார்கள்..( கொண்டாடுங்க,,,இது உங்கள் சாய்ஸ்))

மதியம் வரைக்கும் சாக்லேட் வரவே இல்லை..

ஒருவேளை சிறு வகுப்புகளுக்கு மட்டும் கொடுத்துட்டு போய்ட்டாங்களோ???

பேரிடர் மேலாண்மை பற்றி யும் அதனை சமாளிக்கும் முறை பற்றியும்  கூட்டத்தில் பேசிக்கொண்டே இருந்தார்கள்..

எது வந்தாலும் அழக்கூடாது.என்றார்கள் ((அழுதுகொண்டே))((இவர்களிடம் நான் அழுகிறேன்னு சொன்னேனா??சொன்னேனா??))

சாக்லேட்டக் கொடுங்கப்பா...

பேரிடர் மேலாண்மை பற்றி கற்க வேண்டுமென்றால் எங்க அம்மா சாப்பாட்டை ஒரு நாள் சாப்பிட்டாப் போதும் தைரியம் தன்னால வரப்போகுது..இதுக்கு எதுக்கு மீட்டிங்..?( ஓகேயா டாடி??)
(லூசு மேன்ஸ்...சாக்லேட்டத் தாங்கப்பா))

(இது அம்மாவுக்கு...உங்க அன்பான, ருசியான (!!!!!!!????????) சாப்பாட்டைச் சாப்பிட்டால் தெம்பு வரும் நு மட்டும் தான் சொன்னேன் மா...(கில்லர்ஜி அங்கிள் நடுவில் வந்து ஏதும் சொல்லாமல் இருப்பாராக))

கொஞ்சம் கொஞ்சமாய் கேள்விப்பட்டோம்..வீடு இல்லாமல் போன, உறவினர்கள் இல்லாமல் போன, என்று மழை அடித்துச் சென்ற அனைத்தையும் பற்றி சொல்லிக் கொண்டே இருந்தார்கள்..

நான் மட்டுமெ கொஞ்சம் ஜாலியாக திரில்லிங்காக தப்பித்த கதை சொன்னேன்...(டேஸ்ட்டுக்காக கொஞ்சம் பொய் மிக்ஸிங்))(உண்மை சொன்ன அழுவாச்சியா இருப்பாங்க..சீச்சீ அது நமக்குப் பிடிக்காத ,ஒவ்வாமை ஆகும் பொருள்...)

ஆயாம்மாக்கள் இன்று முழுவதும் துப்புரவுப் பணிகளில்

அதனால், பல வகுப்புகளும் ஒன்றாய்க் கலந்து...பாடமில்லாமல் ஒருநாள்..

(கடைசி வரைக்கும் சாக்லேட் தரலை...)(எங்களுக்கு கொடுக்கிறதாச் சொல்லி ஆட்டைய போட்டாங்க...) ( இப்படி பச்சைப் புள்ளைகள்ட்டருந்து பறிச்சி  தின்னுட்டீங்களே...)))

ஓகே..ஆல் சித்தப்பாஸ்,,,மாமாஸ்,,,அத்தைஸ்,,பெரியப்ஸ்...சித்திஸ்....போய்ட்டு வரேன்...

வாங்க எங்க வீட்டுக்கு...

மழைக்குப் பின்னான வீடு...HOW IS IT??? பாக்கலாம்..
************************************************

இது கட்டுரைங்க...இன்னைக்கு தத்துவம் தீர்ந்து போச்சு...இன்னொரு நாள் சொல்றேன்...சரியா...
****************************************************************

Saturday 12 December 2015

...மாறுவோம்...மாத்துவோம்

ஒன்றுமே இல்லாத வீட்டில் நான்கு சுவர்களுக்கு இடையில் அமர்ந்து இருக்கிறார்கள். என் வயது பிள்ளைகள்..

யார் யாருக்கு யார் இல்லையோ இப்போதே கேட்க பயமாய் இருக்கிறது..

படிக்கபாடப் புத்தகங்கள் இல்லை என்பதைத் தவிர நடந்ததெல்லாம் இமாலய சோகங்கள்

உங்கள் டூத் பேஸ்ட்ல உப்பு இருக்கா என்பது மாதிரியே கேள்விகள் தொடங்கிவிட்டன உன்னிடம் புத்தகங்கள் இருக்கா என்ற வினாக்கள்..

நாளை மறுநாள் தெரியும் இழந்த, இறப்பின் வலிகள்..என் காதுகள் எதையும் கேட்காமல் இருந்தால் தேவலாம். ஆனால் கேட்கும் திறன் அதிகம்``

மழை என்றால் ஒரு காப்பியோடு ஜன்னல் அருகே வேடிக்கை பார்த்துக் கொண்டே புத்தகங்கள் என்ற ஆசை ஆர்வம் எல்லாம் போய், ஒரு பேய் வந்த பயத்தை தந்தது என்னவோ?

ஒரு வாரம் ஒன்றுமே இல்லாத உலகத்தில் அதுவும் பட்டினியாய்..

அப்பா, அம்மா, அக்கா என்று எல்லோராலும் தேவதையாக தாங்கப் பட்ட நானா ? எனக்கா? அப்படியானால் என்னை விடவும் வசதியாய் இருந்த பிள்ளைகள் தாங்கியிருப்பார்களா?

மூன்று தலை முறையாய் நடந்த பிழைகள் மூன்று மாடி வரை வந்து தாக்கி விட்டுச் சென்றுவிட்டது..

தாத்தா அடிக்கடி சொல்வார்..”படிச்சவன் பாட்டைக் கெடுத்தான், எழுதினவன் ஏட்டைக் கெடுத்தான். உணர வைத்தது..பிரமாண்டமாக இருக்கும் சென்னை..பிரபலங்களைக் கொண்ட சென்னை..படித்தவர்கள் அதிகம் கொண்ட சென்னை...ஆனால் படித்தால் மட்டும் போதுமா? என்று நினைக்க வைத்து விட்டது..

இனி வரும் தொற்று வியாதி பற்றி தான் அதிகம் விழிப்புணர்வு கொள்ள வேண்டும்..

இன்னும் சாக்கடையும் மழைநீரும் அகற்றப்படாதது பற்றி யாரும் எதுவும் சொல்லாமலேயே பயணம் செய்து கொண்டே இருப்பதும் ஆச்சர்யமாக இருக்கிறது.



நாங்கள் பிள்ளைகள் பண்ணும் சேட்டைகளை விட எங்கள் அம்மா பண்ணும் சேட்டைகள் தாங்குவது தான் அதிகம்.ஆனால் கொஞ்சம் குறைந்தது மனதுக்கு நல்லாயில்லை.

அப்பா அருகில் இல்லை என்ற வருத்தம் கொஞ்ச நாளாய் நல்ல வேளை அந்த நேரத்தில் அப்பா இங்கே இல்லை என்றே நினைக்க வைத்திருக்கிறது.

இனி எல்லோருக்கும் ஏகப்பட்ட கடமைகள், பொறுப்புகள், வங்கி புத்தகம், கேஸ் இணைப்பு, புதிதாய் வீட்டுக்கு வேண்டிய பொருட்கள், ஆதார், வாகனங்கள் பழுது நீக்கம்( ஒரு வேளை இருந்தால்) அலைந்து கொண்டே இருக்க வேண்டும்..

மனதிடம் கொண்ட அம்மாக்கள், அப்பாக்கள் ஒன்றும் அலட்டவில்லை. அடுத்தடுத்த சம்பளத்தில் வாங்கிக் கொள்ளலாம்

ஆனால் ஏற்கனவே வாசம் “வீசும்” சென்னை இப்போது அதன் மடங்குகளில் வீசுது...

ஒரே ஒரு நன்மை நடந்திருக்கிறது இப்போது மக்கள் குப்பையை குப்பைத் தொட்டியில் போடுகிறார்கள். இதுவும் எவ்வளவு நாட்களுக்கோ????

சிரித்துக் கொண்டே இருக்கும் அம்மா, படித்துக் கொண்டே இருக்கும் அக்கா, கிண்டல் அடித்துக் கொண்டே இருக்கும் அப்பா...தடம் மாறி மீண்டும் தங்கள் இயல்புகளுக்குள் வந்து விட்டார்கள்..( வழக்கம் போல் நான் ஜாலி தான்..சிங்கமே சிங்கிளா வந்தாலும் சிரிப்பு தான்..அம்மா கிட்டருந்து இதைகூட கத்துக்கலைன்னா பின்ன எப்படி?)

ஏரி எல்லாத்தையும் வீடு கட்ட சொன்ன “ நாட்டாமை...நீ தீர்ப்பை மாத்தி சொல்லு””

கரிகாலன் காலத்திலேயே இந்த பேரிடர்ல்லாம் வந்தாச்சுங்க..அப்புறம்..அதெல்லாம் வாழ்க்கைல சகஜமப்பான்னு எல்லோரும் மாறணும்.அதுக்கு ஒரு மருந்து கண்டுபிடிச்சா தேவலை..

(கடைசியா தத்துவம் சொன்னதாலே இதுவும் தத்துவம் தான்...என் தத்துவம்..)






Tuesday 17 November 2015

I Love you forever Mom

 







     அம்மாவிற்காக நானே உருவாக்கியது...

Friday 13 November 2015

கடவுளைக் கண்டேன்

1. பள்ளிகளில் மதிய நேரத்திற்குப் பிறகு பள்ளி புத்தகங்கள் அல்லாத புத்தகங்கள் கொடுத்து படிக்கச் சொல்ல வேண்டும்.

2.எல்லோர் வீட்டிலும் ஒரு சிறிய நூலகம் இருக்க வேண்டும்.

3.5ம் வகுப்பு முதல் அனைவருக்கும் பள்ளியே ஒரு மடிக்கணினி தந்து இணைய இணைப்பும் தர வேண்டும்..( வலை தளங்கள் படிக்கத் தான்..ஹி..ஹி..)

4. யார் யாருக்கு எந்த எந்த துறை பிடிக்கிறதோ அந்த அந்த துறை சார்ந்த படிப்பை மேற்கொள்ள ஆவணம் செய்ய வேண்டும்.

5. அனைத்து நாடுகளுக்கும் பள்ளியிலிருந்தே அழைத்துச் செல்ல வேண்டும்.(செலவு அரசு செய்ய வேண்டும்..மிக்ஸி கிரைண்டர் கொடுப்பதற்கு பதில் இதனைச் செய்யலாம்)

6. வாரம் ஒரு சினிமா கூட்டிப் போக வேண்டும். ( மரத்தைச் சுத்தி சுத்தி பாடும் காதல் படங்கள் அல்லாமல் பயங்கர திரில்லர்.அட்வெஞ்சர் அப்படி இருக்க வேண்டும்.

7. பத்தாம் வகுப்புக்கு மேல் கார் ஓட்ட, பைக் ஓட்ட, விமானம் ஓட்ட என்று அனைத்து வகை வாகனங்களையும் ஓட்டக் கற்றுத் தர வேண்டும்..( இந்த செலவும் அரசின் உடையதே...அதான் நிறைய டாஸ்மாக் ல வருமானம் வருதில்ல)

8. பாடகர்கள், ஞானிகள், கலைஞர்கள், தொழிலதிபர்கள், வாழ்வில் வெற்றி பெற்றோர்களோடு நாங்கள் உரையாட, வழிவகை செய்ய வே\ண்டும்.

9.நான் நினைப்பதெல்லாம் எனக்குச் சாப்பிடக் கிடைக்க வேண்டும்.

10. வீட்டுக்கு வந்ததும் அம்மா, அக்கா, அப்பா, மூவரும் என்னோடு இருக்க வேண்டும்

***************************************************************************

கில்லர்ஜி அங்கிள் யாரையும் எனக்கு இணைக்கத் தெரியவில்லை. அப்படியே நான் இணைத்தாலும் என் வேண்டுகோளுக்கே காது கொடுத்து கேட்க மாட்டாங்க...அப்புறம் கட்டளைக்கு....அதனால் நான் யாரையும் இணைக்க வில்லை...( ஏதோ பச்சைப் புள்ள எழுதுது நு வந்து பாக்குறாங்க..அவ்ளோதான்...)

நன்றி...

கோர்த்து விட்ட அப்பாவுக்கு....

நற...நற....( நன்றினு சொல்ல வந்தேன்)

**********************************************************************************

Thursday 12 November 2015

விட்டாச்சு லீவு...

கோலாம்பஸ் கோலாம்பஸ் விட்டாச்சு லீவு கொண்டாடக்கண்டு பிடிச்சுக்  கொண்டா ஒரு தீவு. என்று துள்ளிக் குதித்து ஓடி வந்தேன் வீட்டுக்கு.. இது நடந்தது நான் பத்தாம் வகுப்பு முடித்ததும்...அப்பப்பாஎன்ன டார்ச்சர். அப்போ படி. இப்போ படி...அதைப் படி..இதைப்படி..இப்படி படி...அப்படி படி...என்று ஆளாளுக்கு மாற்றி மாற்றி சொல்லி என்ன ரகளை பண்ணாங்க...( இவ்ளோ கெடு பிடிலயும் நான் வழக்கம் போல் கதை, கட்டுரை புத்தகங்கள் தான் படித்தேன் என்பது வேறு விஷயம்) ஆனா இனி ஒரு மூணு மாசத்துக்கு எதுவும் சொல்ல மாட்டாங்கல்ல..அதான் இந்த சந்தோஷம்...

எனக்குள் அவ்வளவு திட்டங்கள் வைத்திருந்தேன்..அப்பாவை சிங்கப்பூர் கூட்டிப் போகச் சொல்லணும். அந்தமான் அம்மா மட்டும் போய் வந்துட்டாங்க...நான் போகணும். தீவு என்றால் எப்படி இருக்கும்? நான்கு பக்கங்களிலும் கடல் தண்ணீட்...தண்ணீர்...எவ்வளவு ஜாலி...என்று நினைத்து தான் கற்பனைகள் பற்பல கோட்டை கட்டி வைத்திருந்தேன்.

அக்காவின் மேற்படிப்பு, எனது எதிர்காலம் என்று சென்னை வர வேண்டும் என்று வீட்டில் கலந்தாலோசிக்கப்பட்டது. என்னைச் சின்னவள் என்று தவிர்த்து அக்காவின் வேண்டுகோளின் படி( எனக்குத் தெரியும் சத்தியமா அது கட்டளை..ஆணை...உத்தரவு....ஆனா சொன்னா நம்பவா போறீங்க??) சென்னை போவது என்று முடிவு செய்யப்பட்டது. அப்புறம் என்ன என் கனவு புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்....

நானும் சென்னைக்கு அழைத்து வரப் பட்டேன்...( இல்லை இழுத்து வரப் பட்டேன்) அக்கா..ஏய்...இங்கே புது ஸ்கூல் அங்கே மாதிரி இங்கே தெரிஞ்சவுங்க கிடையாது. நம்மைப் பற்றி நம் ஊரில் தெரியும். ஆனால் இந்த ஊருக்கு நிரூபிக்கணும் அதனால் ஒரு நான்கு ஸ்கூலுக்காவது நீ நுழைவுத் தேர்வு எழுதணும்...அதற்குப் படி என்று சொன்ன கையோடு அவளுடைய புத்தகங்கள் எடுத்து வந்து எனக்கு பாடம் சொல்லிக் கொடுக்க ஆரம்பித்து விட்டாள்..

வீட்டில் இவள் தான் ஆட்சியரின் அதிகாரங்களை ஒட்டு மொத்தமாய்ப் பெற்றவள் என்பதால், அம்மாவும் அப்பாவும் ஆமாம்டா..அக்கா சொல்படி கேட்டு அக்காட்ட படிச்சுக்கோ..என்று சொல்லி விட மீண்டும்....(அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்)

(ஆனா இப்படி கதை புத்தகங்கள் படிச்சே..478 மார்க் வாங்குன நான் முழுமையா படிச்சிருந்தா, இன்னும் கொஞ்சம் அக்கா மாதிரி அதிகம் வாங்கி இருக்கலாம்.அது வேறு விஷயம்)

அடிக்கடி எனக்கு என் பொம்மைகளோடு பேசும் பழக்கம் உண்டு. ஏனென்றால் அது தான் எதிர்த்துப் பேசாது. அடிக்காது, தண்டிக்காது. கண்டிக்காது. டூ விடாது. சொன்னதை வேறு ஒருவரிடம் வேறு மாதிரி சொல்லிப்,  போட்டுக் கொடுக்காது. இப்படி பல வசதிகள் கொண்டதால் நான் அவைகளிடம் பேசிக் கொண்டிருப்பேன். ( என்னாது..? அவைதான் திருப்பி பேசாதுல்ல..என்று கேட்டால் அதற்காகவும் தான் அவைகளுடன் நான் பேசுவேன்)

அப்படி சிந்து என்று பெயர் கொண்ட பொம்மையிடம் புலம்பித் தீர்த்தேன். அப்பா, தீவுக்குக் கூட்டிப் போங்கள் என்றால் நட்பு இல்லாத ஒரு தீவுக்குக் கொண்டு வந்து விட்டுப் போறார்னு சொன்னேன். அது எதுவும் கடவுளிடம் சொன்னதோ என்னவோ,

 நேற்று மழை..மழை...மழை...இதற்கும் அதற்கும் என்ன சம்பந்தம் என்றால் , அம்மாவும் அப்பாவும் இந்த வீடு வாடகைக்குப் பிடித்து, அக்காவுக்கு கட்டணம் கட்டி, எனக்கும் கட்டணம் கட்டி, பாவம் என்று நானே அந்தத் திட்டத்தை மறந்து விட்டேன். ஆனால் பாருங்க...நான் தீவு போகணும்னு சொன்னேன்ல...இன்னைக்கு தீவே எங்க வீட்டு பக்கத்துல வந்திருச்சு. வீடு சுத்தியும் தண்ணீர்..தண்ணீர்.. தீவுக்குப் போயிருந்தால் ஒரு கப்பலில் தான் போயிருக்க முடியும். இன்று என்னைப் போன்றவர்களால் இன்று இந்த நகர் முழுவதும் கப்பல்கள்..காகிதத்தில்.

காகிதங்களைக் கப்பலாக உருவகமாக்கியதால்...வழக்கம் போல் இதுவும் தத்துவம் தாங்க...


Saturday 7 November 2015

உப்பில்லாப் பண்டம்

இதுவரை நீங்கள் உப்பில்லாப் பண்டம் குப்பையிலே என்றே தான் படித்திருப்பீர்கள். ஆனால் இனி அதனை மாற்றிக் கொள்ளவே இந்தப் பதிவு...

இனி இப்படித் திருத்திக் கொள்ளவேண்டும் உப்பில்லாப்பண்டம் குப்பையிலே என்பதை உப்பில்லாப் பண்டம் சூர்யாவின் தொப்பையிலே என்று சொன்னால் போதும்..

விடுமுறை நாட்களின் சில தினங்களில் கூடுதல் நேரம் அம்மா தூங்க நேர்ந்தால் முதல் நாள் சாதம் வைத்து வத்தக்குழம்பும் செய்து வைத்துவிட்டுப் படுத்துவிடுவார்கள். மறுநாள் காலை 8 மணிக்கு மேல் தான் விழிப்போம். உடனே பசிக்குமாதலால் இந்த ஏற்பாடு. அம்மா அதற்கு பொட்டுக்கடலை துவையல், அப்பளம், வடை இவ்வளவும் செய்திருப்பார். பழைய சாதத்தில் தயிர் கலந்து ஒரு உருண்டைக்கு வத்த குழம்பு, ஒரு உருண்டைக்கு துவையல், அப்பளம், வடை என்று சாப்பிட பெரிய விருந்தே சாப்பிட்ட மாதிரி இருக்கும்.அதுவும் அம்மா கையில் அதனை உருண்டையாக்கி கட்டை விடலால் உருண்டையில் ஒரு குழி வைத்து அதில் கரண்டியில் இருந்து சிறிதளவு வத்தல் குழம்பு ஊற்றித் தரும் பக்குவத்தில் .., அப்படியே இரண்டு கிண்ணம் சாதம் சாப்பிட்டு விடலாம்.( உண்மையில் இந்த உருண்டைகளுக்கு ஒபாமா தன் நாட்டை அப்படியே அம்மாவுக்கு தானம் செய்து விடலாம்)

இதெல்லாம் அழகாக நேர்த்தியாகச் செய்யும் அம்மாவிற்கு ஒரு குறை. அது உப்பிட மறந்து போவது. பள்ளிக்கு மதிய உணவாக அம்மா என்ன வைத்திருக்கிறார்கள் என்று ஆவலோடு பிரித்துப் பார்த்தால், சாம்பார் சாதம், பருப்பு சாதம், பால் சாதம் என்று ஏதேனும் ஒரு வகையில் இருக்கும். சில சமயம் தோழிகள் விரும்பும் ஒரு மணத்துடன் இருக்கும்.ஆனால்.தொட்டுக்கொள்ள வைத்த காய்கறியில்...? அதில் உப்பு இருக்காது. அம்மா என்ன வைத்தாலும் அதனை தங்கள் சித்தம் என் பாக்கியம் என்று சொல்லி அப்படியே விழுங்கி விட்டு வருவாள்  என் அக்கா சக்தி.என்னால் தான் அப்படி செய்ய முடிவதில்லை.

அடிக்கடி இவ்வாறு நிகழ்ந்ததால்,பொருத்துப் பொருத்துப் பார்த்த நான் ஒரு சிறிய டப்பா வாங்கி அதில் உப்பு கொட்டி நிரந்தரமாக எனது சாப்பாட்டு பையில் வைத்துவிட்டேன்.அம்மா உப்புப் போட மறந்திருந்தாலும் நானாக உப்பிட்டு ஸ்பூன் வைத்துக் கலக்கிச் சாப்பிட ஆரம்பித்தேன்.

இரண்டு பேருந்துகள் மாறி வேலைக்குப் போகும் நிலையில் அம்மா இருந்ததால், பெருந்தன்மையாய் அம்மாவை மன்னித்து ,எனக்கு நானே திட்டத்தில் உப்பு எடுத்துக் கொண்டு போனேன்.

இப்போதும் சில சமயங்களில் அது போன்று நிகழ்ந்து விடுகிறது. இதனால் உப்புக்கும் அம்மாவிற்கும் உள்ள விருப்பு வெறுப்புகள், தன்மைகள், நிலைமைகள், சூழ்நிலைகள் போன்றவற்றை நான் கண்டுபிடித்தே ஆக வேண்டிய கட்டாய சூழலுக்குத் தள்ளப் பட்டேன்.

அதனால் தான் இந்த ஆய்வு....

என் சிற்றறிவுக்கு எட்டியவரையில் நானாக ஆய்வு செய்து அதன்பயனாக விளைந்த முடிவுகள்

1. அம்மாவிற்கு காந்திஜியைப் பிடிக்கும் . எனவே, மகாத்மா ஆன அவரை உப்பிற்காக யாத்திரை செல்ல வைத்ததற்காக உப்பைப் பிடிக்கவில்லை.

2. உப்பின் மீது முன் ஜென்மப்பகை இருக்கிறது. அதனை இந்த ஜென்மத்தில் பலி வாங்க எண்ணி அம்மா சாப்பாட்டில் உப்பை மறக்கிறார்.

3.அம்மா மிகவும் ஒல்லியாக இருந்து இப்போது சற்றே உப்பிப் போனதால், அதற்கு உப்பு தான் காரணம் என்று நினைத்திருக்க வேண்டும், அல்லது உப்பியிருப்பதால், உப்பு என்ற வார்த்தையைத் தவிர்க்க உப்பைத் தவிர்த்திருக்க வேண்டும்.

4. உப்பு தனக்கு எதிரி என்று தப்பாய்க் கணக்கிட்டு, உப்பைப் போடாமல் தப்புப் பண்ணி, தப்புப் பண்ணதை உப்பு வழியாகக் காட்டி உப்பு மறந்து....,,,,, சரி வரல....... விட்டுடலாம்..

5. உப்பு உடம்புக்கு நல்லதில்லை என்று அம்மாவின் பிஞ்சு மனதை யாரோ கலைத்திருக்க வேண்டும்...

இவை எல்லாம் ஆய்வின் அலசல்கள். இன்னும் நான் ஒரு முடிவுக்கு வரவில்லை. உங்களுக்குத் தெரிந்தால் என்னோடு இந்த உப்பு ஆய்வில், பங்கேற்கலாம்...

டிஜிட்டல் இந்தியா, சிங்காரச் சென்னை மாதிரி...உப்பு சார்ந்த சமையல் இருந்தால் தேவலாம்...ஆமாம் தானே????

ஒப்பில்லாத இந்த உப்பு பற்றி எழுதி நான் ஒப்பு உயர்வற்ற தலைவி...இல்லை உப்பு உயர்வு அற்ற தலைவியாக விடைபெறுகிறேன்...

*********************************************************

வழக்கம் போல் இதுவும் தத்துவம் தான் உப்பு உயர்வுத் தத்துவம்...ஹி..ஹி..

உப்பு க்கான பட முடிவு




Monday 2 November 2015

யுவர் அட்டென்ஷன் ப்ளிஸ் கலெக்டர்

முதல் நாளெல்லாம் நல்ல மழை...பள்ளிக்குள் இருந்த போது அறிவியலை இன்னும் கொஞ்சம் அறுவையாக்கிக் கொண்டிருந்தார், அதன் ஆசிரியர்.(யை)...(பதவிகளுக்கு பெண்பால் கூடாது என்பதால்)

ஞாயிறின் ஏக்கமும் தூக்கமும் முடியுமுன்பே திங்கள் பிறந்து விட்டது..அடடா..என்று எழுந்து , அவசர அவசரமாக குளித்து, ( குளிப்பது போல் போக்குக் காட்டித்தான்) (நல்ல மழைல யாராவது குளிப்பாங்களா? புரியாத அம்மாவை நினைத்துச் சிரித்துக் கொண்டே) சீருடைக்குள் என்னைத் திணித்து கீழே இறங்கினால் , இன்று கண மழைகாரணமாக விடுமுறை உத்தரவு என்று என் போன்ற பிள்ளைகள் எல்லாம் மழையில் நனைந்து கொண்டே நடந்தும், அப்பாக்களின் பின்னேயும், அம்மாக்களின் பின்னேயும் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்...

பூத்ததே எனக்குள் ஒரு மத்தாப்பு....நான்கு புத்தகங்கள் இருக்கு படிக்க..( இவை பள்ளி புத்தகங்கள் என்று நீங்கள் நம்பினால் நான் பொறுப்பல்ல) நல்ல கதைகள்...அடடா..இன்று பஜ்ஜி சாப்பிட்டுக் கொண்டே மழையை ரசித்து காப்பி குடித்துக் கொண்டே படித்து முடித்து விட வேண்டியது தான், என்று துள்ளிக் கொண்டே வீட்டுக்குள் நுழைந்தேன்...

திடீரென்று பெரிய இடி...மழை வருவதன் காரணமாக வானத்தில் அது நிகழ்ந்திருக்கும் என்று நீங்கள் நினைத்திருந்தால் .., மீண்டும் நான் பொறுப்பல்ல..என் அம்மாவின் வாயின் வழியாக என் இதயத்தைத் தாக்கியது அந்த இடி.

அதான் ஸ்கூல் லீவு விட்டாங்கல்ல,இன்னைக்கு ஏதாச்சும் பலகாரம் பண்ணலாமா? அடுத்த வாரம் தீபாவளி, பாரு வீட்டை , நேத்தே துடைச்சிருக்கணும், அம்மாக்கு முடில. துடைச்சிடு.ன்னு சொல்லிட்டு அடுப்படுக்குள் ஒளிஞ்சுகிட்டாங்க. சரிதான் னுசெஞ்சு முடிச்சிட்டு, படிக்கலாம். ரசிக்கலாம், நு வீடை அழகா கூட்டி, துடைச்சு, பளீர் னு வச்சுட்டு நிமிர்ந்தா, அட ரொம்ப அழகா பண்ணிட்டியே. என் செல்லம்ல,னு சொல்லிட்டு மீண்டும் ஒரு இடி..அப்படியே பாத்ரூமையும் கழுவிடு தங்கம் சொல்லி ஒரு முத்தம் வேறு..( அம்மாக்களின் இந்த முத்தத்திற்கு மயங்காத பிள்ளைகள் உலகத்தில் இருக்கா என்ன?)

பாத்ரூமையும் கழுவிட்டுப் பார்த்தா, கட கட நு மணி ஓடிருச்சு. ஸ்கூல்ல இருந்தா இந்நேரம் விளையாட்டு பிரிவேளை. மழைனாலே வெளில் விடாட்டியும், வகுப்புக்கு யாரும் வர மாட்டாங்க..நாங்க, சினிமா கதை, அந்தக் கதை இந்தக் கதை நு சொல்லி சிரிச்சுக்கிட்டே இருந்திருப்போம்...
ஆனா இன்னைக்கு?????????

சரி நான் தான் இப்படி இருக்கிறேன்  முதல்ல ஒருத்திக்கு போன் பண்ணேன். அவ வீட்டுல முறுக்கு, அதிரசம் எல்லாம் செஞ்சாங்களாம்..செல்லம், தங்கம், அம்முலு, என்று அம்மாக்கள் சொல்லும் அனைத்து வார்த்தைகளையும் சொல்லி அவள் அம்மா அவளையும் வேலை வாங்கியிருப்பது கேட்டு அதிர்ந்து  போனேன். 

அதெல்லாம் முடிச்சுட்டு உஸ் அப்பா நு உட்க்கார்ந்தால், அடுத்த மாசம் வர அரைப் பரிச்சைக்கு படி நு சொன்னா, நடத்தாத பாடத்தை, புரியாமலே எப்படி படிக்கிறது? இது கொடுமையால்ல இருக்குனு இன்னொருத்திக்கு போன் பண்ணேன். எங்கம்மா தேவலாம் போல. அவ அம்மா அடுத்த வருஷம் உனக்கு பப்ளிக் எக்ஸாம் ல அதுக்குப் படின்னு சொன்னாங்களாம்..(அங்கும் வேலை வாங்கப் பட்டிருக்கிறது).( அடுத்த வருஷம் வரப் போற பரிட்சைய இப்ப எப்படி படிக்கிறது? யாராச்சும் அவங்களுக்குச் சொல்ல முடியுமா என்ன?)

பிள்ளைகள் அடம் பண்றதும், நினைச்சதை நடத்திக் காட்டுறதும் ராஜா சார் பட்டிமன்றத்துல மட்டும் தான் நடக்கும் போல....

காலைலே மாடிக்குப் போய் மழைய பாத்துட்டு வரலாம் மாடிக்குக் கிளம்பினா மழைல நனையக் கூடாதுனு சொன்னாங்க. மதியம் வேலை முடிச்சுட்டுப் போனா , அய்யோ வெயில் அடிக்குது , இப்ப எதுக்கு மாடிக்குனு சொல்லிட்டாங்க.

இதோட போகும் நினைக்காதீங்க...இன்னைக்கு லீவு விட்டதை இன்னொரு நாள் சனிக்கிழமை ஸ்கூல் வைப்பாங்க...இது அதை விடக் கொடுமை...படிக்க வேண்டிய பாடங்களை ஒழுங்கா படிக்க முடியாது. லீவையும் என்ஜாய் பண்ண முடியாது.


அய்யா மழைக்கு லீவு அறிவிக்கிற கலெக்டர்களே...இனி மேலே பச்சைப் புள்ள மாதிரி மழையைப் பாத்ததும் லீவுனு சொல்லாதீங்க. (அதென்னமோ நீங்க லீவு சொல்ற அன்னைகெல்லாம் சொல்லி வைச்சா மாதிரி வெயில் அடிக்கிது...)

இந்தியச் சட்டங்கள் இயற்றும் போது காஷ்மீர் நீங்கலாக நு சொல்ற  மாதிரி, 10,11,12 வகுப்புகள் நீங்கலாகனு , வேனா சொல்லிக்குங்க...

நன்றிங்க...

( இதுவும் கூட தத்துவம் தாங்க...என் தத்துவம்..ஹி...ஹி...)

********************************************************************************







Thursday 1 October 2015

என்னத்தை சொல்ல?

புதுகையில் நடக்கும் வலை பதிவர் விழாவிற்காகவும், தமிழ் இணையம் நடத்தும் போட்டிக்காகவும் மட்டுமே எழுதப்பட்டது. என்று உறுதியளிக்கிறேன்.2015.போட்டி முடியும் வரை வேறெங்கும் அனுப்ப மாட்டேன் என்றும் உறுதியளிக்கிறேன்.


வகை 2
****************************************************

சென்னையில் எங்கள் வீட்டிற்கு எதிரே பெரிய ஏரி இருக்கிறது. நாங்கள் இருப்பது மூன்றாவது தளம்..அதனால் எங்கள் வீட்டு படுக்கையறையின் வழியாக எப்போதும் ஏரியை பார்த்துக் கொண்டே இருக்கலாம்.
அப்படிப் பார்க்கும் போது மனதிற்கு மகிழ்வாய் சொல்லத் தெரியாத ஆனந்தத்தால் நிரம்புவதாக உணர்கிறேன்.

ஆனால் மூன்று வீதிகளைக் கடந்தும் நீளமாகக் காணப்படும் ஏரியை எல்லோரும் ரசிக்கிறார்கள் தான். நம் ரசிப்பு நமக்கு மட்டும் தானா? அதனை நமக்குப்பின் உள்ளவர்களும் ரசிக்க வேண்டும் என்று நினைக்க வேண்டாமா?

அதற்கென்ன நல்லா ரசியுங்களேன். அதில் என்ன குறை என்று தானே கேட்கிறீர்கள்? அந்தப்பக்கமாகத் தான் மாநகராட்சியின் குப்பைக்கூடைகள் வைக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் மக்கள் குப்பைக் கூடைகளில் குப்பைகளைப் போட்டு நான் ஒரு நாளும் பார்க்க வில்லை.

சுத்தம் சோறு போடும் என்று நீங்கள் எங்களுக்கு சொல்லித் தந்ததை வைத்துக் கணக்கிட்டுப் பார்த்தால் அது ஒரு ஊறுகாய் கூட உங்களுக்குத் தராது என்ற அளவில் தான் இந்த இடமே நாறடித்துக் காணப்படுகிறது.

எங்களைப் போன்ற பிள்ளைகளை அப்படி செய்யாதே, இப்படி செய்யாதே, என்று அடித்து உதைத்து, அழ வைக்கும் பெற்றோர்களே, எங்கள் பள்ளியில் நாங்கள் ஒரு சிறு வீணான தாள், சாக்லேட் பேப்பர் என்று எல்லா வற்றையும் குப்பைக் கூடைகளில் தான் போடுவோம். ((அதன் பக்கத்தில் அல்லது எட்டி போட்டால் யார் மிஸ்ஸுகிட்ட அடி வாங்குறது))

நீங்கள் இந்த அழகிய ஏரியின் கரையைப் பார்த்தால் உங்களுக்கு உங்கள் வயிறு மட்டும் அல்ல. உங்கள் அப்பத்தா, அம்மாச்சியின் வயிறோடு சேர்த்து எரியும். அவ்வளவு பாலிதீன் கவர்கள். அதுவும் நடுவில் ஒரு ஆடி அம்மாவாசை வந்தது பாருங்க. வந்துட்டாங்க. பெரும் கூட்டம். திதி கொடுக்க.. சத்தியமா நான் நீங்க திதி கொடுத்ததுக்கு திட்டலைங்க. ஆனா இப்படியா...அரிசி, ஒரு கவர்ல, வாழைப்பழம் ஒரு கவர்ல, தேங்காய், ஊதுபத்தி என்று எல்லாம் தனித் தனிக் கவர்லே கொண்டுவந்து ஏற்கனவே ஆங்காகே குப்பையோடு குப்பையாய் விட்டுச் சென்றார்கள். ஆனா மறு நாளே இந்த அரசாங்கம் இப்படித்தான் குப்பையாத் தான் இருக்கும்னு ஒருத்தர் திட்டிக்கிட்டே போறார். குப்பை ஆக்குனது நாம ஆனா திட்டுறது அரசாங்கத்தையா??

இந்த ஏரியா உறுப்பினர் அப்பப்ப வந்து பாலிதீன் கவர்களை ஏரியில் இருந்து எடுத்து சரி பண்றார். ஆனால் ஆழத்துக்கு போய் விட்டதை ஒண்ணும் செய்ய முடியலை. சென்னைக்கு ஏற்கனவே ஒரு கூவம் பத்தாதா? அதுவும் ஒரு காலத்துல பெரிய ஆறா இருந்ததுன்னு எங்க மிஸ் சொன்னப்ப எனக்கு இந்த ஏரி ஞாபகம் தான் வந்தது. இதுவும் இப்படியே போனால் ஒரு  நாள் கூவமாக மாறிவிடும்.

ஏன்னா பெரியவங்க தான் இரவு நேரங்கள்ல அங்கே மது அருந்துறாங்க பாட்டில அங்கேயே  வீசுறாங்க. காய்கறிக் கழிவுகள், மனிதக் கழிவுகள் எல்லாத்தையும் தூக்கி எறியுறாங்க. அவங்க வீட்டுக்குள்ள இப்படியா குப்பை போடுவாங்க அப்ப நாட்டுக்குள்ள ஏன் இவ்ளோ குப்பை போடுறாங்க.

யாரையும் புண் படுத்தும் நோக்கில் இதை எழுதவில்லை. ஆனால் மனதுக்கு கஷ்டமாக இருக்கு.
இந்த உலகம் நாம் அழகா வாழ்வதற்குத் தான். ஆனால் நம்மை மட்டும் அழகாக்கிக் கொண்டு நம் சுற்றுப்புறங்களை அசிங்கப்படுத்தலாமா??

நம்மாழ்வார் அய்யா தன்னோட உரையில ( எங்க ஊருக்கு நகர்மன்றத்துக்கு வந்திருந்தார். அவரைக் கடைசியாக அப்போ பார்த்ததோட அவர் இறப்புச் செய்தி தான் கிடைத்தது) நாம் வாழும் இந்த பூமி நம்ம முன்னோர்கள்ட்ட வாங்கின சொத்து இல்லை. நம்ம பின்னோர்கள்ட்ட வாங்கின கடன் நு சொன்னார். கடன் வாங்கிட்டு சரியா கொடுக்காம இருக்கிறதும் நம்ம தப்பு இல்லையா?
எங்களுக்குத் தான் காலைல தொடங்கின அறிவுரை ......அறிவுரை((??!!)), பள்ளிக்கூடத்துல , சாலையில நடக்கும் போது, டாக்டர் வக்கீல் என்று எந்த தொழில் செய்றவங்களும் எங்களுக்கு அறிவுரை சொல்றதை தங்களோட ஜென்ம பலனா வச்சுக்கிட்டு திரியுறாங்களே. அப்படியே தங்களுக்கு தாங்களே அறிவுரை சொல்லி குப்பைய குப்பைக் கூடையிலே போட்டு மத்த இடங்கள் குப்பையாகாமா பாது காப்பாங்களா///???
இவங்க இப்படி பண்ணினா நான் என்னத்தை சொல்ல??????
************************************************************************

வாங்கண்ணா...வணக்கங்கண்ணா....

அம்மம்மா......அப்பப்பா....அண்ணண்ண்ண்ண்ண்ண்ணா...அக்க்க்க்க்கா...

வாங்கோ.....வாங்கோ........எல்லாரும்  வாங்க....

எங்கப் புதுக்கோட்டைக்கு வாங்க.....

பதிவர் திருவிழாவுக்கு வாங்க....

எல்லோரும் எழுத்தாளர்களாக,,, பேச்சாளர்களாக,,,,,,,

வாங்க.....வாங்க....

எங்க ஊரு பெரியவுகள்ளாம் சேந்து...என்னைப் போல சின்னப்புள்ளைகள்,பெரிய புள்ளைகள் எல்லாரூம் எழுதணும்,,,நம்ம தமிழ் கருத்துக்களை ஆவணப்படுத்தணும் ங்கிற நோக்கத்துல வலை தளம் உருவாக்கச் சொல்லி அதுல எழுதுறதப் பாத்து கமெண்டுகள் போட்டு உற்சாகப்படுத்துறாக....

அப்புறம் நீங்க ரசிச்ச, பாத்த, கேட்ட, விஷயங்களை நம்ம எழுத சொல்லுறாக...

அந்தக் காலத்துல பல விஷயங்களை நாம் ஆவணப்படுத்தியதால பல நல்ல விஷயங்கள் கிடைச்சது.

அது செய்யாததால பல நல்ல விஷயங்கள்  நாம் இழந்துட்டோம் ல...

அதனால தாங்க.... நிறைய எழுதுங்க....எழுதுனத எல்லாருக்கும் பகிர்ந்து சொல்லுங்க...அதானே நம்ம தமிழ் சிறப்பு...

இப்ப பெரிய விழாங்க..

அதுல எங்க நிலவன் அங்கிள், திண்டுக்கல் தனபால் அங்கிள், கரந்தை ஜெயக்குமார் அங்கிள்,எங்க அப்பா செல்வா, வைகறை அங்கிள், கீதா ஆண்ட்டி,மாலதி ஆண்ட்டி, ஜெயா ஆண்ட்டி, ரேவதி அக்கா,  இப்படி எல்லாரும் உங்களோட வருகைக்காகத் தான் வழி மேல விழி வச்சுக் காத்திருக்காங்க...

வாங்க..உங்க பதிவுகளச் சொல்லுங்க....

எழுத்தால உயர்வோம்...எண்ணங்களால உயர்வோம்..என்ன நான் சொல்றது?

எங்கே உடனே ரயில்வே ஸ்டேஷன் கிளம்பிட்டீங்களா?

அம்மா அதென்ன கூட்டம் பஸ்ஸ்டாண்டுல?

அடடா...புதுக்கோட்டைக்கு டிக்கெட்டு இல்லையா? எல்லாரும் கார் எடுத்துட்டுக் கிளம்பப் போறீங்களா??

புதுக்கோட்டையில இம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மாம் பெரிய கூட்டமா?????

என்னாது எல்லா நாட்டுலருந்தும் புதுக்கோட்டைக்குப் போறாங்களா?

ஏன்? ஏன்?ஏன்? ஏன்?ஏன்? ஏன்?

அங்கே பதிவர் திருவிழாங்க



கூட்டத்தைப் பாக்க வாங்கண்ணா...வணக்கங்கண்ணாவோவ்

********************************

welcoming in pencil drawing க்கான பட முடிவு

Wednesday 30 September 2015

பொம்மைகளும் நாங்களும்...

புதுகையில் நடக்கும் வலை பதிவர் விழாவிற்காகவும், தமிழ் இணையம் நடத்தும் போட்டிக்காகவும் மட்டுமே எழுதப்பட்டது. என்று உறுதியளிக்கிறேன்.2015.போட்டி முடியும் வரை வேறெங்கும் அனுப்ப மாட்டேன் என்றும் உறுதியளிக்கிறேன்.

வகை 2. 
****************************************************


இந்த உலகத்துல ரொம்பக் கஷ்டம் ரொம்பக் கஷ்டம் பல பேரு பல மாதிரியா புலம்புவாங்க...

நாங்க எப்படிடா மார்க் வாங்குறதுன்னு புலம்புவோம்ல அது மாதிரி..

சின்னப் பிள்ளையா இருக்கும் போது அம்மா கடைக்குக் கூட்டிட்டுப் போனா எதையாவது வாங்கணும் வாங்கணும் தோணும்...ஆனா அம்மாவைப் பார்க்க பாவமா இருக்கும். எல்லா அம்மாவும் அதெல்லாம் வேணாம் நு சொன்னா எங்க  அம்மா மட்டும் உடனே தன் பர்ஸைப் பாப்பாங்க. அதுல பணம் இருந்ததுனா எதா இருந்தாலும் வாங்கிருவாங்க. அப்படி தான் பல பொம்மைகள் எங்க வீட்டுல

நடக்குற பொம்மை, கார் பொம்மை, டெடிபியர் , பாப்பா பொம்மை, இப்படி பல பொம்மைகள் எங்கள் வீட்டில்.

அப்பா சிங்கப்பூர் போனதும் சாக்லேட் வாங்குனாரோ இல்லையோ பொம்மைகள் வாங்கி அனுப்பினார். கவனிக்க பொம்மை”கள்..”

,அம்மாவுக்கும் அப்போது பதவி உயர்வு கிடைக்க புதுக்கோட்டையின் கடைக்கோடி கிராமத்துக்கு மாற்றப்பட்டார். அப்பா அருகே இல்லாததால் நாங்கள் வேறு ஒரு வாடகைக்கு எங்கள் பள்ளியின் அருகே வீடு பார்த்து மாறினோம். 

அம்மா சமையல் சாமான்கள் , புத்தகங்கள் மட்டும் எடுத்துச் செல்லலாம். வாராவாரம் இந்த வீட்டுக்கு வரலாம். வீட்டை வாடகைக்கு விட வேண்டாம் என்று சொல்ல, நாங்கள் எங்கள் பொம்மைகளை பரிதாபமாக பார்த்தோம்.அ ம்மாவிற்கு எங்கள் மீது இரக்கம் பொத்துக் கொண்டு வர பொம்மைகளோடு பயணமானோம்.

மாலை அம்மா பள்ளிவிட்டு இரண்டு பேருந்துகள் மாறி பேருந்து நிலையம் வந்து அதன் பின் தன்னுடைய இரு சக்கர வாகனத்தை எடுத்து வர வேண்டும். அது வரை இந்த பொம்மைகள் தான் எங்களின் ஆறுதலும் தேறுதலும். அம்மா வீடு வந்ததும் ஏன்மா வீடெல்லாம் இப்படி பரப்பி போட்டுருக்கீங்க என்று தினமும் கேட்பாள். அப்போதெல்லாம் எங்களுக்குப் புரிவதில்லை. அதன் பழுவும் சுமையும்.

அம்மாவுடன் நாங்களும் சேர்ந்தே எடுத்து வைத்து அதன் பின் ஏதாவது செய்து சாப்பிட்டு வீட்டுப் பாடங்கள் எழுதி தூங்கப்போகும் போதும் எங்களோடு தூங்கும் பொம்மைகளும்..

தினமும் அவைகளோடு வாழ்வதால் நானும் அக்காவும் அதற்கு பெயர்கள் வைத்தோம். எங்களுக்கு பெயர்கள் இருப்பதால் அவைகளுக்கும் அவசியம் பெயர் இருக்க வேண்டும் என்று கருதினோம். 

வெள்ளை டெடி பியர் ,(நந்து,),  பெண் பொம்மைக்கு மித்ரா,நாய்க்குட்டி பெயர் சிவா, டைகருக்கு ரோஷன், கருப்பு டெடிபியருக்கு கார்த்திக், தலை விரித்து ஆடும் பொம்மைக்கு வந்தனா, தையா தையா என்று ஆடும் பொம்மைக்கு பப்பி, அப்படியாக பெயர்களை அன்றாடம் வைப்போம். மிகச் சரியாக ஒவ்வொன்றின் பெயரையும் சொல்லி அழைப்பாள் அக்கா.

இதெல்லாம் அம்மாவிற்குப் புரியாது என்று நினைத்த வேளையில் ஒருநாள் உன் நந்து ஏன் தண்ணிக்குள் கிடக்கிறான் என்று கேட்க நாங்கள் பெயர் வைத்தது அம்மாவிற்கு எப்படித்தெரியும் என்று எங்களுக்கு ஒரே ஆச்சரியம். அம்மாவும் , என் கனவில்நீங்கள் என்ன செய்றீங்கன்னு பிள்ளையார் அப்பச்சி தினம் தினம்வந்து சொல்லும் என்று சொன்னவுடன் அப்படித்தான் போல. என்று நினைத்து தெரியாமல் நான் சாக்லேட் சாப்பிட்டால் கூட தெரிந்துவிடும் என்று பயந்து நான் அம்மாவுக்கு தெரியாமல் சாக்லேட் சாப்பிடுவதை நிறுத்தி விட்டேன். 

பொம்மைகளின் எண்ணிக்கை வர வர அதிகமாகியதே தவிர குறையவில்லை. எங்கள் வீட்டில் ஷோ கேஸ் ல இருக்கிற பொம்மைகளைப்பார்த்து விட்டு  பிறந்தநாள் தீபாவளிக்கெல்லாம் பொம்மைகள் கிடைத்தது. 

தாத்தாவும் ஒருநாள்  நாங்கள் பொம்மைகளோடு விளையாடுவதைப் பார்த்து ஒரே நேரத்தில் 10 பொம்மைகள் வாங்கித் தந்தார். ஒவ்வொரு பொம்மைக்கும் பெயர் வைப்பது சற்று சிரமாக இருந்த பொழுதில் அம்மா தன் பள்ளியில் உள்ள பெயரைச் சொல்லச் சொல்லி அதன் பெயர் வைப்போம். அல்லது எங்களது வகுப்பில் உள்ளவர்களின் பெயர்கள் வைக்கப்படும். எங்கள் வகுப்பு பெயர்களை நாங்கள் விரும்புவதில்லை. அப்புறம் அந்த உண்மையான பிரண்டு டன் ”டூ “ விட்டால் இந்த பொம்மை களுடனும் விளையாட முடியாதே.

   வாடகை அதிகமாக அதிகமாக, பள்ளி மாறியதாலும் வேறு இரண்டு வீடுகள் மாறும் போதும் பொம்மைகள் கூடவே வந்தன. 
 எங்கள் தேவையான பொருட்களுக்கு ஆகும் இடத்தை எல்லாம் இந்த பொம்மைகள் ஆக்கிரமித்ததாலும் நாங்களும் பொம்மைகளோடு கொஞ்சம் தள்ளி இருக்க ஆரம்பித்தோம். 
நாங்கள் சென்னை வந்த போது முக்கியமான பொம்மைகளை மட்டும் எடுப்போமா என்றாள் அக்கா. ஆனால் அங்கே வீடு எப்படிக் கிடைக்குமோ என்ற பயத்தால் எடுத்து வரவில்லை. இப்போது பொம்மைகள் புதுகை வீட்டில் சிலிப்பர் செல்லாக மேலே பரணில் கிடக்கிறதாம்..

உங்கள் யாருக்கேனும் அந்த பொம்மைகள் வேண்டுமா?

பின் குறிப்பு:
*****************
சில நாள் கழித்து நீங்களும் இப்படிஒரு பதிவு போடுவீர்கள்.

பரணுக்குள் கிடந்தாலும் அம்மாவின் அன்போடும் அப்பாவின் ஆசையோடும் கிடக்கின்றன பொம்மைகள்
******************************************************


நீதி:
*******
சத்தியமாய் தேவைக்கும் அதிகமாக பொருட்கள் வாங்கினால் உங்களுக்கும் உங்களை ச் சுற்றும் சூழலுக்கும் பாதிப்பு தான்
தத்துவம்:
************
நீங்கள் விளையாட தேவையான பொம்மை தவிர வாங்கும் ஒவ்வொரு பொம்மையும் அடுத்தவருடையது. அதுவும் நல்லதல்ல...


அன்று...இன்று...நன்று

புதுகையில் நடக்கும் வலை பதிவர் விழாவிற்காகவும், தமிழ் இணையம் நடத்தும் போட்டிக்காகவும் மட்டுமே எழுதப்பட்டது. என்று உறுதியளிக்கிறேன்.2015.போட்டி முடியும் வரை வேறெங்கும் அனுப்ப மாட்டேன் என்றும் உறுதியளிக்கிறேன்.வகை 4. புதுக்கவிதை
******************************************************

அன்று...இன்று...நன்று....

ஆடைகள் நமக்கு அரணாகும்
பெரிய கூட்டங்களுக்கு
சாதாரண ஆடை அணிய முடியாது அன்று
ஆணுக்கும் பெண்ணுக்கும்
அரையாடையே
முழு ஆடை ஆனது இன்று.

கிழிந்த ஆடை என்றால்
மதிப்பில்லை அன்று
ஆங்காங்கே
கிழித்துப் போட்டால் நன்று இன்று

தமிழ் பேசினால் கைதட்டி
முதல்வர் பதவி
கொடுத்தது அன்று
தமிழ் பேசினால்
கை கொட்டி சிரித்து
கேவலப்படுத்துது இன்று

தமிழுக்காக தண்டவாளத்தில்
தலைவைத்துப் படுத்தது அன்று
தமிழ் வராது, என்று சொல்வது
நாகரீகம் இன்று

ஏதேனும் ஒரு படிப்பு படித்தால்
வேலை கிடைக்கும் அன்று
என்ன படித்தாலும்
வேலை கிடைக்காது இன்று

உழுதுண்டு வாழ்வாரை
பின் செல்வார் அன்று
உழுதோர் எல்லாம்
அழுதோர் ஆனார் இன்று

வீடுகளில் கொல்லைப்புறத்தில்
தோட்டம் இருக்கும் அன்று
கொல்லைபுறமின்றி
வீடுகள் கட்டி வாடகைக்கு விடும் இன்று

ஊரே சொந்தம் தான் அன்று
அதனால் தான் சொந்த
ஊர் எது என்று கேட்டார் அன்று
சொந்தமே இல்லாமல் பிணங்கள்
தான் நடக்குது இன்று

ஊருணி, குளம் என
நீர்நிலைகள் அன்று
அக்வாபினா போன்ற
நீர் நிலையங்கள் தான் இன்று

மூச்சு இருந்தால் தான்
உயிர் உண்டு உணர்வாய்
என்றும்
மூச்சு இருக்கும் போதே
திருந்திடுவாய் மனிதா
நன்று

***************************************************

Tuesday 29 September 2015

சமூகமே விழித்தெழு

புதுகையில் நடக்கும் வலை பதிவர் விழாவிற்காகவும், தமிழ் இணையம் நடத்தும் போட்டிக்காகவும் மட்டுமே எழுதப்பட்டது. என்று உறுதியளிக்கிறேன்.2015.போட்டி முடியும் வரை வேறெங்கும் அனுப்ப மாட்டேன் என்றும் உறுதியளிக்கிறேன்.வகை 2. சமூக விழிப்புணர்வுக் கட்டுரை
******************************************************

சமூகமே விழித்தெழு
**********************

பிறந்தது முதல் புதுகையிலிருந்து விட்டு திடீரென்று சென்னை வந்துள்ளோம். அங்கே அமைதியான சூழல் , சாலையில் அம்மாவுடன் வண்டியில் செல்லும்  போது வணக்கம் சொல்லி அன்புடன் பழகும் மனிதர்கள், எப்போதும் நிதானமான பேச்சு,  என்று எதுவும் இங்கு இல்லை. அதோடு அங்கே குழந்தைகள் சாலைகளில் தான் விளையாடுவார்கள், சதுர்த்தி, ஆவணி ஞாயிறு,ஆடிவெள்ளி,என்று எல்லா பண்டிகைகளுக்கும் சேர்ந்து ஏதாவது செய்வது, பழகுவது, நாங்கள் ஊருக்குப் போய் திரும்பி வந்தால் எதிர் வீடு பக்கத்து வீட்டின் விசாரிப்புகள், அன்புப் பரிமாற்றங்கள், இஸ்லாமிய நண்பர்கள் அவர்களின் பண்டிகைகளுக்கு அழைப்பதும் கிறிஸ்துவர்கள் அவர்களின் பண்டிகைகளுக்கு அழைப்பதும் மாறி மாறி நடந்து கொண்டே தான் இருக்கும். ஆனால் இங்கே ஒருவருக்கு ஒருவர் பேசுவது இல்லை.ஒரு புன்னகை கூட இல்லை. ஒருவேளை அதிகம் பழகாதது தான் காரணம் என்று நான் நினைத்திருந்தால் வீட்டின் அருகே இருபது வருடமாக கடை வைத்திருப்பவர், பக்கத்தில் இருக்கும் ஒருவர் 10 வருடமாக ஏதோ ஒரு கம்பெனியில் வேலை பார்ப்பவரோடு பேசுவதே இல்லையாம்.அதெப்படி சாத்தியம் என்று எனக்கு அவ்வளவு குழப்பமாக இருந்தது. அந்த வீட்டுப் பெண் நான் படிக்கும் பள்ளியில் படிக்கிறாள். எனக்கு இன்னும் இங்குள்ள வீதிகளைக் கடக்கத் தெரியவில்லை. (அம்மா இங்கே இல்லாத போது பள்ளிக்கு நானே தான் நடந்து செல்கிறேன்) ஏனெனில் சாதாரண சாலைகளிள் கூட நெருக்கம், நெருக்கம்.அதுவும் நாங்கள் இருப்பதோ உலகின் நம்பர் ஒன் மார்கெட் சிட்டி யான பீனிக்ஸ் மால் பக்கம் . அப்படியானால் எவ்வளவு கூட்டம் இருக்கும் என்று பாருங்களேன். அப்படி நான் சாலைகள் கடக்க எனக்கு யாருடைய உதவியாவது தேவைப் படுவதால் நான் அவளுடன் செல்வேன். அதுவே அவர்களுக்கு மிகப் பெரிய அதிர்ச்சியாக இருக்கிறது. வேலை , வேலை விட்டு வந்தால் தொலைக்காட்சி என்று அவர்கள் வாழ்வை அவர்களாகவே குறுக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

 என் ஊரில் சொந்தம் அல்லாதவர்களும் சொந்தம் போல் பழகுவதும் இங்கு சொந்தக்காரர்களே சொந்தம் இல்லாமல் இருப்பதும் எனக்குப் பார்க்கத் திகைப்பாய் இருக்கிறது. பள்ளியில் ஆசிரியர்களும் ஒருவருக்கு ஒருவர் தொடர்பாய் இல்லை. இயற்பியல் எடுக்கும் ஆசிரியப்பெண்மணிக்கு வேதியியல் எடுக்கும் ஆசியரின் வீட்டில் எத்தனை குழந்தைகள் என்று கூடத் தெரியவில்லை. ஒரு நாள் வேதியியல் ஆசிரியரின் குழந்தைக்கு உடல்நலம் இல்லை என்று மருத்துவமனைக்குச் சென்று விட இயற்பியல் ஆசிரியர் மாற்றுப் பணிக்கு வந்தார். ஆனால் அவர் எங்களிடம் வந்து உங்கள் ஆசிரியர் ஏன் வரவில்லை என்று கேட்கிறார். நாங்கள் காரணம் சொன்னதும், ஓ, அவர்களுக்கு கல்யாணம் ஆகி குழந்தைகள் இருக்கிறார்களா என்று கேட்டார்.இவர் இந்தப் பள்ளியில் 15 வருடமாக வேலை பார்ப்பவராம். அவர் இந்தப்பள்ளியில் 10 வருடமாக வேலை பார்ப்பவராம்.

 இதைக் கேட்ட போது அம்மாவிடம் உதவி ஆசிரியராக வேலை பார்த்து வேறு எங்கோ தலைமை ஆசிரியராக பணியேற்ற ஒருவர், 10 வருடங்களுக்குப் பிறகு வந்து இனிப்பு வழங்கி தன் மகிழ்வைத் தெரிவித்ததோடு சூர்யா நல்லா இருக்கியா? என்ன படிக்கிறே? கைக் குழந்தையாக உன்னைத் தூக்கிக் கொண்டு ஓடினோம். என்று சொல்லிவிட்டு தன் குடும்பத்துடன் வந்து போனார்கள். அடிக்கடி அம்மாவிற்கு வரும் அலைபேசிகள் யாராவது ஒரு அத்தை, பெரியம்மா, என்று சொந்தங்களே அல்லாதவர்கள் சொந்தங்களாகத் திகழ்ந்தனர். ஆனால் இங்கே...? எது இப்படி இவர்களை ஆட்டிப் படைக்கிறது? பணம் தான் முக்கியம் என்றால்? மனிதர்கள் தேவையற்றுப் போனார்களா? கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்று எங்களுக்குச் சொல்லிக் கொடுத்து விட்டு புன்னகை கூட செய்ய இயலாமல் இருப்பதன் நோக்கம் என்ன?

சென்னையில் ஏமாற்றுக்காரர்கள் அதிகம் தான் என்றாலும் பார்க்கும், பழகும், எதிர்படும் அனைத்து மனிதர்களும் ஏமாற்றுக்காரர்களாய் தங்கள் மனதில் சித்தரித்துக் கொண்டார்களா? இது இப்படி இருக்க அம்மா இங்கே வந்தவுடன் தன் தோழியின் வீட்டுக்கு எங்கள் எல்லோரையும் அழைத்துச் சென்றார். அங்கே அந்தக் குழந்தைகள் ( என் வயதினர் தான்) வாங்க என்றதோடு சரி. தொலைக்காட்சிப் பெட்டியை விட்டு அவர்கள் கண்களும் அகலவில்லை . கால்களும் நகர வில்லை. நாங்கள் கிளம்பிய பின் போய்ட்டு வாங்க என்று அவசர அவசரமாக் ஒரு சிறிய புன்னகையை சிந்தி விட்டு தங்கள் தொடர்களுக்குள் மூழ்கிப் போயினர். சில நாட்கள் கழித்து அவர்களே இங்கே வந்தார்கள். குடும்பத்துடன் தான். அந்தக் குழந்தைகள் இனி இங்கே வருவதே இல்லை என்று முடிவு செய்து கொண்டனர். ஏனெனில் எங்கள் வீட்டில் தொலைக்காட்சிப் பெட்டி இல்லை.ஆனால் நிறைய புத்தகங்கள் இருக்கிறது. அதிகமான தமிழ் மொழியில் உள்ள புத்தகங்கள். (கதைகள், கவிதைகள், கட்டுரைகள், கலந்து தான்) இருப்பது அவர்களுக்கு மொழி புரியவில்லை. காரணம் அவர்கள் பள்ளியில் சமஸ்கிருதம் படிக்கிறார்களாம். அதற்கு அவர் அம்மா சொன்ன காரணம் , இந்தத் திருக்குறளை கஷ்டப்பட்டு படிச்சு என்னபிரயோஜனம்? அதற்கு எளிமையான சமஸ்கிருதம் படித்தால் ஒரே ஒரு பொருத்துக, கோடிட்ட இடம் சிறு கேள்விகளுக்கு நிறைய மதிப்பெண்கள் தருவார்கள், என்றார். எனக்குத் தலை சுற்றியது. வேற்று மாநிலத்தில் தான் நான் இருக்கிறேனா? அல்லது இது தமிழகம் தானா? தன் மொழியைப் பழித்தவனை தாய் தடுத்தாலும் விடேன் என்று சொல்லி தானே கேள்விப் பட்டிருக்கிறேன்.இங்கே ஒரு தாயே பழிக்கிறாளே? அந்தக் குழந்தைகளுக்கு எங்கள் வீடு வேண்டாத வீடாய்ப் போய் விட்டது. நல்லவேளை எங்கள் வீட்டில் கணினியும், அம்மாவின் ஆண்ட்ராய்டு பேசியும் இருந்தது அதனால் ஒரு அரை மணிநேரம் அவர்களால் இருக்க முடிந்தது. தொலைக்காட்சி தான் உயிர், அது இருந்தாலே போதும் என்று நினைக்க வைத்ததும், நினைப்பதும் அந்தக் குழந்தைகளின் குற்றமாக இருக்கும் என்றா நினைத்தீர்கள்.? இங்கே இருக்கும் ஒவ்வொருவருக்கும் பொது நிகழ்வுகள் என்று ஏதும் இல்லை.


எங்கள் வீட்டில் எங்கள் தாத்தாவைப் போல் எங்கள் அம்மா ஒன்றும் மிகச் சிறந்த பக்திமான என்று சொல்லிவிட முடியாது. ஆனால் அக்கம் பக்கத்தில் எல்லோருடனும் பழகுவதற்காகவே அம்மா அவர்களோடு கோயில் போவது, ஆடிச் செவ்வாய், சதுர்த்தி, சஷ்டி, என்று கொண்டாடுவார்.

 நான் பிறந்தது முதல் எங்கள் வீட்டுக்கு(இஸ்லாமியர்) ஒருவர் நோன்பு க்கஞ்சி கொண்டு வந்து தருகிறார். அம்மா இல்லையென்றால் எதிர் வீட்டுப் பாட்டி எங்கள் வீடு வந்து வத்தக் குழம்பு செய்து கொடுத்துவிட்டு செல்வார். இத்தனைக்கும் அந்தத் தாத்தா புதுக்கோட்டையில் மிகப்பிரபலமான ஒருவர். \

அதே போல் அருகில் மிகப் புகழ் பெற்ற ஒரு கவிஞர் வீட்டிலிருந்தும் சில சமயம் சாப்பாடு வருவதுண்டு.(அந்தக் கவிஞரின் மனைவிக்கு எங்களை மிகவும் பிடிக்கும்.எங்கள் கார் இல்லையென்றாலும் குறித்த நேரத்தில் தங்கள் காரில் எங்களை வீட்டுக்கு அனுப்பி விடுவார்.) 

என் அம்மாவின் தோழி எங்கள் வீட்டிற்கு உணவருந்தப் போகிறார் என்றால் நாங்கள் குஷியாகி விடுவோம்.(இவருமே புதுகையில் பிரபலம் தான்) அவர் கொண்டு வரும் சாக்லேட் மட்டும் சிறப்பு அல்ல. அவருக்காக அம்மா பல சாப்பாடு அயிட்டங்களை தயார் செய்வதோடு அந்த அன்புப் பரிமாற்றமும் தான்.

 இன்று யாருடைய முகநூல் எடுத்துப் பார்த்தாலும் குறைந்தபட்சம் 1000  நண்பர்களாவது இருக்கிறார்கள். ஆனால் சொந்தங்கள்? முகம் தெரியாமல் இத்தனை நண்பர்கள் இருக்கிறார்கள் என்று சொல்வதில் என்ன பயன்? 

இத்தனைக்கும் அம்மா புதுகையில் யார் வீட்டுக்கும் அநாவசியமாய் போவதில்லை. ஆனால் முக்கியமான தினங்களில் அவர்களோடு இருப்பார். ஒரு முறை ஒரு ஆசிரியத் தோழிக்கு உடல் நலம் இல்லாமல் இருக்க இரவு ஒரு மணிக்கு எங்களை எழுப்பி சொல்லிவிட்டு அம்மாவும் அப்பாவும் தங்கள் காரை எடுத்துக் கொண்டு கதவை வெளியெ பூட்டி விட்டு சென்று வந்தனர். அதெல்லாம் இங்கே நினைத்துக் கூட பார்க்க இயலாது போல. 

என் வகுப்பில் நான் பேசும் சிறு வார்த்தைகள், எல்லாம் இவள் நல்லா தமிழில் பேசுகிறாள்டி என்று சொல்லி வியந்து போகின்றனர். வெறிச்சோடி, நெடுஞ்சாண் கிடையாக, பழக்கவழக்கம்,என்ற சொற்கள் தெரியாமல் இருந்தாலும் பரவாயில்லை. சாலை என்று நான் சொல்ல அவர்கள் அனைவரும் சேர்ந்து சிரித்து இந்தப் பொண்ணு ரோடைப் போய் சாலைனு சொல்லுது பாரேன் என்று சொல்லி சிரிக்கும் அளவுக்கு தமிழ் வளர்ச்சி என்று போய்க் கொண்டிருக்கிறது சென்னை.

சமூகமே விழித்தெழு என்று தலைப்பு வைத்து விட்டு இது போன்ற செய்திகளை பகிர்கிறேனே என்று தானே யோசிக்கிறீர்கள். உண்மையில் நீங்கள் மரம் வளர்ப்பதை விட முக்கியமான மனிதநேயம் வளர்ப்பது, பாலிதீன் பைகளை புறக்கணிப்பதை விட முக்கியமானது தேவையான நேரங்களில் தொலைக்காட்சிப் பெட்டியைப் புறக்கணிப்பது, அன்றாடம் பழங்கள் , கீரைகள் என்று வாங்கி சாப்பிடுவதை விட முக்கியமானது நாம் அன்றாடம் மற்றவர்களுடன் பழகுவது. நமது சுற்றுசூழல் மாசு அடைவது ஒரு கவலை என்றாலும் அதனை விட நாம் கவலைப் பட வேண்டிய விஷயம் மக்களோடு பழகுவது. சமூகமே விழித்தெழு...ஒன்று பட்டால் உண்டு வாழ்வு...
************************************************************************

Monday 28 September 2015

ஏறுவோம் முன்னேறுவோம்


ஏறுவோம் முன்னேறுவோம் என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்ள இக்கட்டுரை எனது சொந்தப் படைப்பே எனச் சான்றளிக்கிறேன். இப்படைப்பு இதற்கு முன் வெளியானதல்ல எனவும் போட்டி முடிவு வெளியாகும் வரை வேறெங்கும் பிரசுரத்திற்கு அனுப்பமாட்டேன் எனவும் சான்றளிக்கிறேன்


 “வலைப்பதிவர் திருவிழா-2015” மற்றும் தமிழ்இணையக் கல்விக்கழகம் நடத்தும் “மின்தமிழ் இலக்கியப்போட்டிகள்-2015“க்காகவே எழுதப்பட்டது

வகை 3  பெண்ணிய கட்டுரை

*****************************************
பெயர்:S.ராகசூர்யா
வயது:15
கல்வித்தகுதி:XI-std
முகவரி:சென்னை..600042
****************************************

ஏறுவோம் முன்னேறுவோம்

பெண்மை வாழ்கென்று கூத்திடு வோமடா
பெண்மை வெல்கென்று கூத்திடு வோமடா

 பாரதியார் பெண்மையை போற்றுவோரின் நாயகன்.அவன் மொழி கொண்டு என் கட்டுரை தொடங்குகிறேன்.


பள்ளியில், எப்போதும் மாணவர்களைத்தான் தலைவர் ஆக்குகிறார்கள். வகுப்பு ஆசிரியர் பெண்ணாக இருந்தாலும் அவர்களும் அந்த நடைமுறைதான் பின்பற்றுகிறார்கள். துணைத்தலைவராகத் தான் மாணவிகள் இருக்க வேண்டும். அந்த ஆண் தலைவர்கள் பெண் தலைவர்கள் சொல்வதைக் கேட்பதில்லை. ஆனால் பெண் தலைவர்கள் யாராக இருந்தாலும் தாங்கள் சொல்வது எல்லாவற்றையும் ஏற்க வேண்டும் நினைத்துக் கொள்கிறார்கள்.

அதோடு தினமும் அவர்களுக்குப் பிடித்த மாணவிகள் என்றால் கரும்பலகையில் பெயர் எழுதமாட்டார்கள். ஆனால் பிடிக்காதவர்கள் என்றால் அதுவும் முதல்வர் சுற்றுக்கு வரும் நேரம் அறிந்து எழுதிக் கொடுத்து மாட்டி விடுவார்கள். தவறே செய்யவில்லை என்றாலும் ஒரு சிறு தவறு செய்தாலும் பல தவறுகள் செய்தது போலவும்  போட்டுக் கொடுத்து விடுவார்கள். பொய்களுக்கு எப்போதுமே துணைகள் அதிகம் தானே. அவன் நண்பர்கள் எல்லோரும் அவனுக்கு சாதகமாகத் தான் சாட்சி சொல்வார்கள். இல்லாத ஒன்று இருப்பதாக சொல்ல எத்தனை சாட்சி தேவைப்படும். நம்புவது போல் சொல்வதை உண்மை யறியாமல் முதல்வர் முதல்,, வகுப்பு ஆசிரியர் வரை நம்புவது தான் கொடுமை

அதே போல் பேச்சுப்போட்டிக்கு பக்கத்தில் உள்ள இடங்களுக்கு மட்டுமே மாணவிகள் அனுமதிக்கப்படுகின்றனர். தூரத்தில் போய் பங்கேற்க வேண்டும் என்றால் உன்னை யார் கூப்பிட வருவார்கள்?, உங்கள் அப்பா எங்கே வேலை பார்க்கிறார்?. உங்கள் அப்பத்தா எங்கே வேலை பார்க்கிறார்கள் என்று கேள்வி மேல் கேள்வி கேட்டு, ”சீச்சீ ”இந்த போட்டியே வேண்டாமடா சாமி என்று முடிவெடுக்க வைத்து விடுகிறார்கள். ஒரு வேளை வகுப்பு ஆசிரியை அனுமதித்து விட்டால் பள்ளி முதல்வர் நம் குலம் , கோத்திரம் எல்லாம் கேட்பார். ( ஒருவேளை மாப்பிள்ளை பார்க்கிறோமா அல்லது போட்டிகளுக்குத்தான் அனுப்புகிறோமா என்பதை மறந்து விடுவார்கள் போலும்.) அதையும் விடுத்து 

பள்ளித் தாளாளரிடம் அனுப்பினால்< அம்மா எல்.ஐ.சி.லோன் வாங்கக் கூட இத்தனை கையெழுத்து போட்டிருக்க மாட்டார்கள். இவர்களிடம் கைகட்டி அந்த “போனோபைட்” சான்றிதழ் வாங்குமுன் அய்யோ...அம்மா....ஆனால் மாணவர்களுக்கு இது எதுவுமே கிடையாது. பஸ்ல போய்டு..என்று சொல்லி ,பேருந்து எண் சொல்லி, இங்கே நிற்க வேண்டும், நடக்க வேண்டும், எல்லாம் சொல்லித்தருவார்கள். அதை எங்களுக்கும் சொல்லி ஊக்கப்படுத்தி போக வைக்கலாம் என்று இது வரை யாருக்கும் தோணுவதில்லை.. 

பள்ளியில் தான் அப்படி என்றால் வீட்டில் ஒரு திருவிழாவுக்கு கூட்டிப்போங்கள் என்றால் இரண்டு பக்கமும் அம்மா, அப்பா இருவரும் கையை இருக்கப் பிடித்துக் கொள்வார்கள்..( இடி ராஜாக்களிடமிருந்து காப்பாற்ற அல்லது நான் தொலைந்து போகாமல் இருக்க என்று பல்வேறு காரணங்கள் வேறு..இவர்களுக்கு எங்கிருந்து தான் ஊறுமோ?)

இது தான் இப்படி என்றால் நான் அதிர்ந்த ஒரு விஷயம் ஒன்று உண்டு. ஒருநாள் அம்மா தன் பள்ளியில் ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு பண்ணியிருந்தார். நாங்களும் குடும்பத்துடன் போனோம். ( எங்கே போனாலும் அப்படித்தான்..நல்லவேளை காய்கறி கடைக்கும் அரிசிக் கடைக்கும் தான் நாங்கள் குடும்பத்துடன் போகலை. அம்மா தன் சி.ஆர்.சி.கூட்டம், தலைமைஆசிரியர் கூட்டம் முதற்கொண்டு குடும்பத்துடன் தான் கூட்டிச்செல்வார்.)(என்ன பேமியோ என்று நீங்கள் முணகினாலும் அது தான்..அப்படித்தான்) 

அங்கே தலைவர் தலைவர் என்று ஒரு பெண் பெயரைச் சொல்லி பாராட்டிக் கொண்டிருந்தார்கள். ஆனால் விழா மேடையில் அம்மாவைத் தவிர வேறு பெண்களே இல்லை. நானும் கூட, வராத தலைவருக்கு இப்படி ஒரு மரியாதையா? என்ன மக்கள்? அவர் நல்ல “ பணி” ஆற்று வார் போல என்று நினைத்தேன். ஆனால் இப்போது தலைவர் பேசுவார் என்றதும் ஒரு ஆண் வந்து பேசினார். நான் திடுக்கிட்டாலும் சுஜாதா என்று ஒரு ஆண்,  பெண் பெயர் கொண்டு கதை எழுதலாம்  இது செய்யக்கூடாதா? சரி அப்படித்தான் இருக்கும் என்று நினைத்துத் தான் அமைதியானேன். 

ஆனால் விழா முடிந்ததும் நிகழ்வு வருகைப் பதிவேடு நோட்டில் , புடவையைக் கூட ஒழுங்காகக் கட்டத் தெரியாத, தலை சீவாத, குளிக்காத ஒரு பெண் கையெழுத்திட்டாள்.    (கையெழுத் து வாங்கும் பணி என் தலையில் அம்மா கட்டியிருந்தார்).  அவர்களுக்குத் தெரியாது ,அவர்கள் பெயரைச் சொல்லி... அந்தக் கோட்டுக்கு நேரே கையெழுத்து வாங்கு என்று சொல்லி யிருந்ததால் அய்யோ இந்தப் பெண்மணி தலைவர் என்று போட்டிருந்த இடத்திற்கு நேரே ஆனால் மிகச் சரியாக சுசீலா என்று (கோணல் மாணாலாகத்தான்) அய்யோ இது வேறு சுசீலா போல..அம்மாவிடம் எப்படி திட்டு வாங்குவது என்று நினைத்தால்...அய்யோ அந்த அம்மா தான் தலைவராம். அப்போ மேடையில் பேசியது,,அவள் கணவராம்.ஆட்சியர் அலுவலகதுக்கே அவர் தான் போவாராம். எங்கள் வகுப்பே தேவலாம் என்று இருந்தது. நாங்கள் டம்மியாக இருந்தாலும் நாங்கள் எங்கள் பெயர் அழைக்கப்படும் போது நாங்கள் தான் பேசுவோம்.

சமுதாயத்தில் இந்த நிலையில் தான் இருக்கிறது, பெண்களின் முன்னேற்றம். அதற்கு அவர்கள் கொடுத்த விளக்கம், இது வரை அந்த பகுதியில் பெண் தலைவர்களே இல்லை. இப்போது பெண் பெயராவது தலைவராக இருக்கிறதே அதுவே பெரிய முன்னேற்றம் என்று சொன்னார்கள்

அப்புறம் சமூகத்தில் எப்போதும் ஒரு விவாதம் நடந்து கொண்டே இருக்கிறது பெண்கள் தங்கள் ஆடைகளை சரியாக அணியாததால் தான் இது போன்ற பெண்களுக்கு எதிரான வன்முறைகள் நடக்கிறது என்று பேசிக்கொள்கிறார்கள். பெண்கள் ஆடைகளை ஒழுங்காக போட்டு விட்டால் இவர்கள் ஊழல் செய்வதை நிறுத்தி விடுவார்களா? கோயில்கள் சிலை திருட்டு நின்று விடுமா? அரசாங்க அலுவலகத்தில் செம்மையாக தங்கள் பணிகள் செய்திடுவார்களா? பி.எஃப் லோன் பணப் பரிவர்த்தனை இல்லாமல் ஷேன்ஷன் பண்ணிவிடுவார்களா? எல்லாத் துறைகளும் தங்கள் பணிகளை சிறப்பாக செய்துவிடுவார்களா? விவசாயம் மீண்டும் தழைத்து விடுமா? எதுவுமே இல்லை. ஏதோ ஒன்று சொல்வதற்காக ஆடைகளைப் பற்றிக் குறை சொல்கிறார்கள். 

எங்கள் இனிய தோழி மலாலா நல்ல ஆடைகளைத் தானே அணிந்திருந்தார். அவர் ஏன் அவ்வளவு பாதிப்புக்கு உள்ளானாள்? அவள் போல் தான் எங்களைச் சுட்டுக் கொல்ல முயற்சித்தாலு ம் நாங்கள் உயிர்த்தெழுவோம், மேன்மையாவோம்

மற்றுமொரு விஷயத்தை இவர்கள் தவறாகவே பயன்படுத்துகிறார்கள். பெண்கள் அதிகமாக புரண் பேசுகிறார்கள் என்று சொல்கிறார்கள்.எங்களுக்கு நேரமே இல்லை. பெரியவர்களாக இருந்தால் வீட்டு வேலை செய்கிறார்கள். என்னைப் போல் சிறியவர்களாக இருந்தால் படிக்கிறோம். நாங்கள் எந்த தேநீர் கடைகளிலும் நின்று நேரம் கடத்துவதில்லை. அப்புறம் எப்படி புரண் பேசுவோம்? 

ஆண்கள் தான் கட்டைச்சுவர்களில் உட்கார்ந்து, தேநீர்கடைகளில் இருந்து கொண்டு பேசிக்கொண்டேடேடேடே இருக்கிறார்கள். நாங்கள் படிக்கிறோம் இல்லாவிட்டால் அம்மாவுக்கு அப்பாவுக்கு உதவி செய்கிறோம்.

எனக்குத் தெரிந்து அம்மாவுக்கு வரும் புலம்பல் தொலைபேசிகளில் பெண் பிள்ளைகளைப் பெற்றவரிடமிருந்து வருவதே இல்லை. ஆண் பிள்ளைகள் பெற்றவர்கள் தான் பணம் கேட்கிறான். சொன்னது கேட்கமாட்டுறான். எப்போதும் போன், அல்லது தொலைக்காட்சிப் பெட்டி முன் கிடக்கிறான்  என்று புலம்புகிறார்கள். 

என்வீட்டிலும் என் அம்மா தன் அம்மா வீட்டுக்குப் போனால் பாத்திரம் தேய்த்து, துணிதுவைத்து, சமயத்தில் கரண்ட் பில் கட்டிகொடுத்து, காய்கறி ,மளிகை என்று எல்லாம் வாங்கிக் கொடுப்பாள்.

 ஆனால் அப்பா தன் அம்மா அப்பா  வீட்டுக்குப் போனால் சும்மா டி.வி. பார்ப்பார். முடிந்தவரை அவர்களை மிரட்டுவார். அதட்டுவார். 
அப்படியானால் உண்மையான அன்பும் பிரியமும் உழைப்பும் பெண்களிடம் மட்டும் தான் இருக்கிறது என்று சொல்ல வில்லை பெண்களிடம் தான் அதிகம் இருக்கிறது. அது இன்னும் தன்னை முன்னேற்றிக் கொள்வதிலும் மாற வேண்டும். மாறுவோம். ஏறுவோம். முன்னேறுவோம். எங்கள் விடிவெள்ளி இதோ நான் இந்த வலைதளத்தை ஆரம்பிப்பதில் தொடங்குகிறது. இதை வாசித்தபின் நீங்கள் யோசிப்பதில் தொடர்கிறது.

Saturday 26 September 2015

ஒரு கதை ........[பெரிய மனிதர்களுக்கு]

                  ஒரு வீட்ல தாத்தா  அவர் மகன் ,மருமகள்,பேரனோடு  இருந்தார் . மகனுக்கும் மனைவிக்கும்  அவரை பிடிக்காது  திட்டிடே இருப்பாங்க. அவருக்கு அலுமினிய  தட்டில் தான் பழைய சாதம் வைப்பாங்க, அத பார்த்த பேரன் ஒரு நாள் அப்பா தந்த பாக்கெட் மணில்ல  இரண்டு அலுமினிய  தட்டு  வாங்கி வந்தான் ‘ஏண்டான்னு  கேட்டா  உனக்கு தான் அப்பா நான் வளர்ந்த அப்பறம் விலை கூடிடும் அதான் இப்பவே  வாங்கினேன் ` என்றான்  .
          இப்படிதான் ஒவ்வொறு குழந்தையையும்  சமூகத்தின் எதிரிகளாக மாற்றி  வைதிருக்கிறோம் , இந்த கதை  நான்  ஐந்தாவது படிக்கும் போது  படித்தது.
     
குழந்தை என்பது  ஒரு உன்னதமான ஆத்மா, அதை நாம்  சமூகம், சாதி,மதம் ,இனம் என பிறக்கும்போதே பிரித்து  வைத்து விட்டோம் இது போக இன்னும்  நிறைய  கட்டுபாடுகள் .பெற்றோர்கள்  பிள்ளையை பள்ளிக்கு அனுப்பும்  செயல் இருக்கிறதே ‘இத பாரு ஸ்நாக்ஸ யார்கிட்டேயும் தரக்கூடாது  சரியா ‘ என்று கூறி அதன் மனதை சிறு வயதிலேயே நாம்தான் மாற்றுகிறோம்.
சக்தி அக்கா ஒரு தடவை சொன்னா 
                                   “குழந்தைகள் ஒருபோதும் தம்
                                         பெற்றோரை  பிறரோடு ஒப்பிடுவது இல்லை
                                         உண்மையில் யார்  பெரியவர்கள்”
      அப்பா அடிச்சாலும் அப்பா நமக்கு  ஒரு ஹீரோ தான்  அனா பிள்ளை சேட்டை பண்ணும்போது எப்படி குரங்குன்னு திட்ட தோன்றுகிறது. 

வீட்டில் பால் வாங்கி வரவேண்டும் என்று லஞ்சம் கொடுத்து  பழக்கியதால் தான்  அவன் தன் வேலை பார்க்க லஞ்சம் கேட்கிறான்.

 நாம் குழந்தையை தொலைக்காட்சி பார்க்க பழக்கி விட்டு அவன்  ஆசிரியரிடம் போய் எப்ப பார்த்தாலும்  அவன் டீவி பார்த்துகொண்டே இருக்கிறான் என்று கூறினால் என்ன அர்த்தம்


குழந்தை உங்களின் கண்ணாடி அது உங்களை தான் பிரதிபலிக்கும் நீங்கள் இனிமையானவர் என்றால் அது இனிமையானதாக வளரும்
நீங்கள் சிடுசிடுவென்று உங்கள் பெற்றோரை காப்பகம் அனுப்பினால் அது உங்களை நாளை  காப்பகம் அனுப்பும் .இதற்கு முன் பல பேர் சொன்னதுதான் ஆனாலும் சொல்கிறேன் .”குழந்தை உங்களின் மூலம் உலகிற்கு வந்தது உங்களுக்காக வந்தது அல்ல” உங்கள் கனவுகளை அதனுள் திணிக்காதீர்கள் .

அவை  யாவற்றையும் ரசிக்கும்,நேசிக்கும் தன்மை கொண்டது உங்கள் கட்டுபாடுகள் மூலம் வெறுக்க வைத்து விடாதீர்கள்.
   உங்களை குறை சொல்லவில்லை உங்களின் ஏமாற்றம் கோபங்களாக  மாறி இருக்கலாம் . 

நான் சின்னவள் அறிவுரை கூறவில்லை சமூகத்தை மாற்ற   சொல்லவில்லை உண்மையில் அது ஒரு தனி மனித முயற்சியினால்   நடக்காது .நாம் நமது சூழல், பண்பாடு,சமூக மாற்றம்,நம் சமூகம்    முன்னேற முயற்சிகள், என பல தலைப்புகள் நாம் விவாதிக்க   வேண்டுமானால் சுவையானதாகவும் காரசாரமான ஒரு விவாதமாகவும் அமையும் .ஆனால் மாற்றத்தை ஏற்படுத்தாது.

       குழந்தைகள் -அவற்றை நேசியுங்கள் அவை வரைய  காகிதம் அல்ல வானத்தையே பரிசாக தாருங்கள்,விளையாட பொம்மை அல்ல நீங்களே பொம்மையாக மாறுங்கள்.அன்பை புரிய வைங்க [அன்பாஆஆஆஆ அவற்றால் ஒரு மிட்டாய் கூட வாங்க முடியாது என ஒதுக்கி விட வேண்டாம்]
    அவை பார்த்துகொள்ளும் நாளைய சமூகத்தை ----நீங்கள்  சமூகம் சமூகம் என்று கழுவாய் கரையாமல் சற்று ஓய்வு எடுங்கள்  

Wednesday 23 September 2015

வணக்கம்

வணக்கம். நான்  சின்னவள் .........ரொம்ப இல்லை பதினொராம் வகுப்பு                                     
              படிப்பில் மட்டுமல்ல வாழ்கையிலும் மாணவி  

   இந்த குட்டி தென்றலுக்கு[..நானே தான் சொல்லவேண்டியிருக்கு..ஹும்]  பெரியவங்க வச்ச பெயர் ராகசூர்யா   . நானும் சூரியனை போல் இருக்கனும்ன்னு நினைக்கிறேன் ஆனா கிருஷ்ணர் மாதிரி நிறைய  குறும்பு பன்னுவேன்  நான் தான் இப்படின்னு பாத்தா அம்மா  அதுக்கும் மேல சேட்டை,, சாக்லேடை காப்பாத்த நான் படுகிற பாடு  .......ஐயோ  சரி விஷயதிற்கு வர்றேன் நான் வலைதளம் ஆரம்பித்து இருக்கிறேன்  எல்லாரும் வந்து பாருங்கள்  
                 இனி நான் நிறைய கருத்து சொல்வேன் 
                [கருத்து???!!! இது எனக்கே ஓவரா இல்லை ] 
               கேக்கணும் சொல்லிட்டேன்   
    [கட்டாயம் கமெண்டும் போடணும்] இல்லாட்டி  முட்டை மந்திரிச்சு வச்சுடுவேன்......