Tuesday 29 September 2015

சமூகமே விழித்தெழு

புதுகையில் நடக்கும் வலை பதிவர் விழாவிற்காகவும், தமிழ் இணையம் நடத்தும் போட்டிக்காகவும் மட்டுமே எழுதப்பட்டது. என்று உறுதியளிக்கிறேன்.2015.போட்டி முடியும் வரை வேறெங்கும் அனுப்ப மாட்டேன் என்றும் உறுதியளிக்கிறேன்.வகை 2. சமூக விழிப்புணர்வுக் கட்டுரை
******************************************************

சமூகமே விழித்தெழு
**********************

பிறந்தது முதல் புதுகையிலிருந்து விட்டு திடீரென்று சென்னை வந்துள்ளோம். அங்கே அமைதியான சூழல் , சாலையில் அம்மாவுடன் வண்டியில் செல்லும்  போது வணக்கம் சொல்லி அன்புடன் பழகும் மனிதர்கள், எப்போதும் நிதானமான பேச்சு,  என்று எதுவும் இங்கு இல்லை. அதோடு அங்கே குழந்தைகள் சாலைகளில் தான் விளையாடுவார்கள், சதுர்த்தி, ஆவணி ஞாயிறு,ஆடிவெள்ளி,என்று எல்லா பண்டிகைகளுக்கும் சேர்ந்து ஏதாவது செய்வது, பழகுவது, நாங்கள் ஊருக்குப் போய் திரும்பி வந்தால் எதிர் வீடு பக்கத்து வீட்டின் விசாரிப்புகள், அன்புப் பரிமாற்றங்கள், இஸ்லாமிய நண்பர்கள் அவர்களின் பண்டிகைகளுக்கு அழைப்பதும் கிறிஸ்துவர்கள் அவர்களின் பண்டிகைகளுக்கு அழைப்பதும் மாறி மாறி நடந்து கொண்டே தான் இருக்கும். ஆனால் இங்கே ஒருவருக்கு ஒருவர் பேசுவது இல்லை.ஒரு புன்னகை கூட இல்லை. ஒருவேளை அதிகம் பழகாதது தான் காரணம் என்று நான் நினைத்திருந்தால் வீட்டின் அருகே இருபது வருடமாக கடை வைத்திருப்பவர், பக்கத்தில் இருக்கும் ஒருவர் 10 வருடமாக ஏதோ ஒரு கம்பெனியில் வேலை பார்ப்பவரோடு பேசுவதே இல்லையாம்.அதெப்படி சாத்தியம் என்று எனக்கு அவ்வளவு குழப்பமாக இருந்தது. அந்த வீட்டுப் பெண் நான் படிக்கும் பள்ளியில் படிக்கிறாள். எனக்கு இன்னும் இங்குள்ள வீதிகளைக் கடக்கத் தெரியவில்லை. (அம்மா இங்கே இல்லாத போது பள்ளிக்கு நானே தான் நடந்து செல்கிறேன்) ஏனெனில் சாதாரண சாலைகளிள் கூட நெருக்கம், நெருக்கம்.அதுவும் நாங்கள் இருப்பதோ உலகின் நம்பர் ஒன் மார்கெட் சிட்டி யான பீனிக்ஸ் மால் பக்கம் . அப்படியானால் எவ்வளவு கூட்டம் இருக்கும் என்று பாருங்களேன். அப்படி நான் சாலைகள் கடக்க எனக்கு யாருடைய உதவியாவது தேவைப் படுவதால் நான் அவளுடன் செல்வேன். அதுவே அவர்களுக்கு மிகப் பெரிய அதிர்ச்சியாக இருக்கிறது. வேலை , வேலை விட்டு வந்தால் தொலைக்காட்சி என்று அவர்கள் வாழ்வை அவர்களாகவே குறுக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

 என் ஊரில் சொந்தம் அல்லாதவர்களும் சொந்தம் போல் பழகுவதும் இங்கு சொந்தக்காரர்களே சொந்தம் இல்லாமல் இருப்பதும் எனக்குப் பார்க்கத் திகைப்பாய் இருக்கிறது. பள்ளியில் ஆசிரியர்களும் ஒருவருக்கு ஒருவர் தொடர்பாய் இல்லை. இயற்பியல் எடுக்கும் ஆசிரியப்பெண்மணிக்கு வேதியியல் எடுக்கும் ஆசியரின் வீட்டில் எத்தனை குழந்தைகள் என்று கூடத் தெரியவில்லை. ஒரு நாள் வேதியியல் ஆசிரியரின் குழந்தைக்கு உடல்நலம் இல்லை என்று மருத்துவமனைக்குச் சென்று விட இயற்பியல் ஆசிரியர் மாற்றுப் பணிக்கு வந்தார். ஆனால் அவர் எங்களிடம் வந்து உங்கள் ஆசிரியர் ஏன் வரவில்லை என்று கேட்கிறார். நாங்கள் காரணம் சொன்னதும், ஓ, அவர்களுக்கு கல்யாணம் ஆகி குழந்தைகள் இருக்கிறார்களா என்று கேட்டார்.இவர் இந்தப் பள்ளியில் 15 வருடமாக வேலை பார்ப்பவராம். அவர் இந்தப்பள்ளியில் 10 வருடமாக வேலை பார்ப்பவராம்.

 இதைக் கேட்ட போது அம்மாவிடம் உதவி ஆசிரியராக வேலை பார்த்து வேறு எங்கோ தலைமை ஆசிரியராக பணியேற்ற ஒருவர், 10 வருடங்களுக்குப் பிறகு வந்து இனிப்பு வழங்கி தன் மகிழ்வைத் தெரிவித்ததோடு சூர்யா நல்லா இருக்கியா? என்ன படிக்கிறே? கைக் குழந்தையாக உன்னைத் தூக்கிக் கொண்டு ஓடினோம். என்று சொல்லிவிட்டு தன் குடும்பத்துடன் வந்து போனார்கள். அடிக்கடி அம்மாவிற்கு வரும் அலைபேசிகள் யாராவது ஒரு அத்தை, பெரியம்மா, என்று சொந்தங்களே அல்லாதவர்கள் சொந்தங்களாகத் திகழ்ந்தனர். ஆனால் இங்கே...? எது இப்படி இவர்களை ஆட்டிப் படைக்கிறது? பணம் தான் முக்கியம் என்றால்? மனிதர்கள் தேவையற்றுப் போனார்களா? கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்று எங்களுக்குச் சொல்லிக் கொடுத்து விட்டு புன்னகை கூட செய்ய இயலாமல் இருப்பதன் நோக்கம் என்ன?

சென்னையில் ஏமாற்றுக்காரர்கள் அதிகம் தான் என்றாலும் பார்க்கும், பழகும், எதிர்படும் அனைத்து மனிதர்களும் ஏமாற்றுக்காரர்களாய் தங்கள் மனதில் சித்தரித்துக் கொண்டார்களா? இது இப்படி இருக்க அம்மா இங்கே வந்தவுடன் தன் தோழியின் வீட்டுக்கு எங்கள் எல்லோரையும் அழைத்துச் சென்றார். அங்கே அந்தக் குழந்தைகள் ( என் வயதினர் தான்) வாங்க என்றதோடு சரி. தொலைக்காட்சிப் பெட்டியை விட்டு அவர்கள் கண்களும் அகலவில்லை . கால்களும் நகர வில்லை. நாங்கள் கிளம்பிய பின் போய்ட்டு வாங்க என்று அவசர அவசரமாக் ஒரு சிறிய புன்னகையை சிந்தி விட்டு தங்கள் தொடர்களுக்குள் மூழ்கிப் போயினர். சில நாட்கள் கழித்து அவர்களே இங்கே வந்தார்கள். குடும்பத்துடன் தான். அந்தக் குழந்தைகள் இனி இங்கே வருவதே இல்லை என்று முடிவு செய்து கொண்டனர். ஏனெனில் எங்கள் வீட்டில் தொலைக்காட்சிப் பெட்டி இல்லை.ஆனால் நிறைய புத்தகங்கள் இருக்கிறது. அதிகமான தமிழ் மொழியில் உள்ள புத்தகங்கள். (கதைகள், கவிதைகள், கட்டுரைகள், கலந்து தான்) இருப்பது அவர்களுக்கு மொழி புரியவில்லை. காரணம் அவர்கள் பள்ளியில் சமஸ்கிருதம் படிக்கிறார்களாம். அதற்கு அவர் அம்மா சொன்ன காரணம் , இந்தத் திருக்குறளை கஷ்டப்பட்டு படிச்சு என்னபிரயோஜனம்? அதற்கு எளிமையான சமஸ்கிருதம் படித்தால் ஒரே ஒரு பொருத்துக, கோடிட்ட இடம் சிறு கேள்விகளுக்கு நிறைய மதிப்பெண்கள் தருவார்கள், என்றார். எனக்குத் தலை சுற்றியது. வேற்று மாநிலத்தில் தான் நான் இருக்கிறேனா? அல்லது இது தமிழகம் தானா? தன் மொழியைப் பழித்தவனை தாய் தடுத்தாலும் விடேன் என்று சொல்லி தானே கேள்விப் பட்டிருக்கிறேன்.இங்கே ஒரு தாயே பழிக்கிறாளே? அந்தக் குழந்தைகளுக்கு எங்கள் வீடு வேண்டாத வீடாய்ப் போய் விட்டது. நல்லவேளை எங்கள் வீட்டில் கணினியும், அம்மாவின் ஆண்ட்ராய்டு பேசியும் இருந்தது அதனால் ஒரு அரை மணிநேரம் அவர்களால் இருக்க முடிந்தது. தொலைக்காட்சி தான் உயிர், அது இருந்தாலே போதும் என்று நினைக்க வைத்ததும், நினைப்பதும் அந்தக் குழந்தைகளின் குற்றமாக இருக்கும் என்றா நினைத்தீர்கள்.? இங்கே இருக்கும் ஒவ்வொருவருக்கும் பொது நிகழ்வுகள் என்று ஏதும் இல்லை.


எங்கள் வீட்டில் எங்கள் தாத்தாவைப் போல் எங்கள் அம்மா ஒன்றும் மிகச் சிறந்த பக்திமான என்று சொல்லிவிட முடியாது. ஆனால் அக்கம் பக்கத்தில் எல்லோருடனும் பழகுவதற்காகவே அம்மா அவர்களோடு கோயில் போவது, ஆடிச் செவ்வாய், சதுர்த்தி, சஷ்டி, என்று கொண்டாடுவார்.

 நான் பிறந்தது முதல் எங்கள் வீட்டுக்கு(இஸ்லாமியர்) ஒருவர் நோன்பு க்கஞ்சி கொண்டு வந்து தருகிறார். அம்மா இல்லையென்றால் எதிர் வீட்டுப் பாட்டி எங்கள் வீடு வந்து வத்தக் குழம்பு செய்து கொடுத்துவிட்டு செல்வார். இத்தனைக்கும் அந்தத் தாத்தா புதுக்கோட்டையில் மிகப்பிரபலமான ஒருவர். \

அதே போல் அருகில் மிகப் புகழ் பெற்ற ஒரு கவிஞர் வீட்டிலிருந்தும் சில சமயம் சாப்பாடு வருவதுண்டு.(அந்தக் கவிஞரின் மனைவிக்கு எங்களை மிகவும் பிடிக்கும்.எங்கள் கார் இல்லையென்றாலும் குறித்த நேரத்தில் தங்கள் காரில் எங்களை வீட்டுக்கு அனுப்பி விடுவார்.) 

என் அம்மாவின் தோழி எங்கள் வீட்டிற்கு உணவருந்தப் போகிறார் என்றால் நாங்கள் குஷியாகி விடுவோம்.(இவருமே புதுகையில் பிரபலம் தான்) அவர் கொண்டு வரும் சாக்லேட் மட்டும் சிறப்பு அல்ல. அவருக்காக அம்மா பல சாப்பாடு அயிட்டங்களை தயார் செய்வதோடு அந்த அன்புப் பரிமாற்றமும் தான்.

 இன்று யாருடைய முகநூல் எடுத்துப் பார்த்தாலும் குறைந்தபட்சம் 1000  நண்பர்களாவது இருக்கிறார்கள். ஆனால் சொந்தங்கள்? முகம் தெரியாமல் இத்தனை நண்பர்கள் இருக்கிறார்கள் என்று சொல்வதில் என்ன பயன்? 

இத்தனைக்கும் அம்மா புதுகையில் யார் வீட்டுக்கும் அநாவசியமாய் போவதில்லை. ஆனால் முக்கியமான தினங்களில் அவர்களோடு இருப்பார். ஒரு முறை ஒரு ஆசிரியத் தோழிக்கு உடல் நலம் இல்லாமல் இருக்க இரவு ஒரு மணிக்கு எங்களை எழுப்பி சொல்லிவிட்டு அம்மாவும் அப்பாவும் தங்கள் காரை எடுத்துக் கொண்டு கதவை வெளியெ பூட்டி விட்டு சென்று வந்தனர். அதெல்லாம் இங்கே நினைத்துக் கூட பார்க்க இயலாது போல. 

என் வகுப்பில் நான் பேசும் சிறு வார்த்தைகள், எல்லாம் இவள் நல்லா தமிழில் பேசுகிறாள்டி என்று சொல்லி வியந்து போகின்றனர். வெறிச்சோடி, நெடுஞ்சாண் கிடையாக, பழக்கவழக்கம்,என்ற சொற்கள் தெரியாமல் இருந்தாலும் பரவாயில்லை. சாலை என்று நான் சொல்ல அவர்கள் அனைவரும் சேர்ந்து சிரித்து இந்தப் பொண்ணு ரோடைப் போய் சாலைனு சொல்லுது பாரேன் என்று சொல்லி சிரிக்கும் அளவுக்கு தமிழ் வளர்ச்சி என்று போய்க் கொண்டிருக்கிறது சென்னை.

சமூகமே விழித்தெழு என்று தலைப்பு வைத்து விட்டு இது போன்ற செய்திகளை பகிர்கிறேனே என்று தானே யோசிக்கிறீர்கள். உண்மையில் நீங்கள் மரம் வளர்ப்பதை விட முக்கியமான மனிதநேயம் வளர்ப்பது, பாலிதீன் பைகளை புறக்கணிப்பதை விட முக்கியமானது தேவையான நேரங்களில் தொலைக்காட்சிப் பெட்டியைப் புறக்கணிப்பது, அன்றாடம் பழங்கள் , கீரைகள் என்று வாங்கி சாப்பிடுவதை விட முக்கியமானது நாம் அன்றாடம் மற்றவர்களுடன் பழகுவது. நமது சுற்றுசூழல் மாசு அடைவது ஒரு கவலை என்றாலும் அதனை விட நாம் கவலைப் பட வேண்டிய விஷயம் மக்களோடு பழகுவது. சமூகமே விழித்தெழு...ஒன்று பட்டால் உண்டு வாழ்வு...
************************************************************************

3 comments:

  1. அன்புடையீர் வணக்கம்.
    தங்கள் படைப்பை நமது தளத்தில்,
    “போட்டிக்கு வந்த படைப்புகள்“ பகுதியில் இணைத்திருக்கிறோம்.

    பார்க்க - http://bloggersmeet2015.blogspot.com/p/contest-articles.html
    வகை – (2)
    வரிசை எண்-32

    மற்ற தலைப்புகளிலும் தாங்கள் பங்குபெற்று
    இன்னும் பல படைப்புகளை எழுதி
    இன்று இரவுக்குள் அனுப்பலாமே?

    நன்றி வணக்கம்.
    அன்புடன்,
    நா.முத்துநிலவன்,
    ஒருங்கிணைப்பாளர்-விழாக்குழு,
    கணினித் தமிழ்ச்சங்கம், புதுக்கோட்டை

    ReplyDelete
  2. சூர்யாவின் வார்த்தைகளால்
    சமூகம் விழித்தெழட்டும்
    அருமை
    வாழ்த்துக்கள் சூர்யா

    ReplyDelete
  3. thagalin padivugal enai primeka vaikerathu. thagalin anupavam athanode samugathin tharpothu ula nelamai thagalin moli aalumai yaal prithipalikerathu. g

    ReplyDelete