Thursday 1 October 2015

என்னத்தை சொல்ல?

புதுகையில் நடக்கும் வலை பதிவர் விழாவிற்காகவும், தமிழ் இணையம் நடத்தும் போட்டிக்காகவும் மட்டுமே எழுதப்பட்டது. என்று உறுதியளிக்கிறேன்.2015.போட்டி முடியும் வரை வேறெங்கும் அனுப்ப மாட்டேன் என்றும் உறுதியளிக்கிறேன்.


வகை 2
****************************************************

சென்னையில் எங்கள் வீட்டிற்கு எதிரே பெரிய ஏரி இருக்கிறது. நாங்கள் இருப்பது மூன்றாவது தளம்..அதனால் எங்கள் வீட்டு படுக்கையறையின் வழியாக எப்போதும் ஏரியை பார்த்துக் கொண்டே இருக்கலாம்.
அப்படிப் பார்க்கும் போது மனதிற்கு மகிழ்வாய் சொல்லத் தெரியாத ஆனந்தத்தால் நிரம்புவதாக உணர்கிறேன்.

ஆனால் மூன்று வீதிகளைக் கடந்தும் நீளமாகக் காணப்படும் ஏரியை எல்லோரும் ரசிக்கிறார்கள் தான். நம் ரசிப்பு நமக்கு மட்டும் தானா? அதனை நமக்குப்பின் உள்ளவர்களும் ரசிக்க வேண்டும் என்று நினைக்க வேண்டாமா?

அதற்கென்ன நல்லா ரசியுங்களேன். அதில் என்ன குறை என்று தானே கேட்கிறீர்கள்? அந்தப்பக்கமாகத் தான் மாநகராட்சியின் குப்பைக்கூடைகள் வைக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் மக்கள் குப்பைக் கூடைகளில் குப்பைகளைப் போட்டு நான் ஒரு நாளும் பார்க்க வில்லை.

சுத்தம் சோறு போடும் என்று நீங்கள் எங்களுக்கு சொல்லித் தந்ததை வைத்துக் கணக்கிட்டுப் பார்த்தால் அது ஒரு ஊறுகாய் கூட உங்களுக்குத் தராது என்ற அளவில் தான் இந்த இடமே நாறடித்துக் காணப்படுகிறது.

எங்களைப் போன்ற பிள்ளைகளை அப்படி செய்யாதே, இப்படி செய்யாதே, என்று அடித்து உதைத்து, அழ வைக்கும் பெற்றோர்களே, எங்கள் பள்ளியில் நாங்கள் ஒரு சிறு வீணான தாள், சாக்லேட் பேப்பர் என்று எல்லா வற்றையும் குப்பைக் கூடைகளில் தான் போடுவோம். ((அதன் பக்கத்தில் அல்லது எட்டி போட்டால் யார் மிஸ்ஸுகிட்ட அடி வாங்குறது))

நீங்கள் இந்த அழகிய ஏரியின் கரையைப் பார்த்தால் உங்களுக்கு உங்கள் வயிறு மட்டும் அல்ல. உங்கள் அப்பத்தா, அம்மாச்சியின் வயிறோடு சேர்த்து எரியும். அவ்வளவு பாலிதீன் கவர்கள். அதுவும் நடுவில் ஒரு ஆடி அம்மாவாசை வந்தது பாருங்க. வந்துட்டாங்க. பெரும் கூட்டம். திதி கொடுக்க.. சத்தியமா நான் நீங்க திதி கொடுத்ததுக்கு திட்டலைங்க. ஆனா இப்படியா...அரிசி, ஒரு கவர்ல, வாழைப்பழம் ஒரு கவர்ல, தேங்காய், ஊதுபத்தி என்று எல்லாம் தனித் தனிக் கவர்லே கொண்டுவந்து ஏற்கனவே ஆங்காகே குப்பையோடு குப்பையாய் விட்டுச் சென்றார்கள். ஆனா மறு நாளே இந்த அரசாங்கம் இப்படித்தான் குப்பையாத் தான் இருக்கும்னு ஒருத்தர் திட்டிக்கிட்டே போறார். குப்பை ஆக்குனது நாம ஆனா திட்டுறது அரசாங்கத்தையா??

இந்த ஏரியா உறுப்பினர் அப்பப்ப வந்து பாலிதீன் கவர்களை ஏரியில் இருந்து எடுத்து சரி பண்றார். ஆனால் ஆழத்துக்கு போய் விட்டதை ஒண்ணும் செய்ய முடியலை. சென்னைக்கு ஏற்கனவே ஒரு கூவம் பத்தாதா? அதுவும் ஒரு காலத்துல பெரிய ஆறா இருந்ததுன்னு எங்க மிஸ் சொன்னப்ப எனக்கு இந்த ஏரி ஞாபகம் தான் வந்தது. இதுவும் இப்படியே போனால் ஒரு  நாள் கூவமாக மாறிவிடும்.

ஏன்னா பெரியவங்க தான் இரவு நேரங்கள்ல அங்கே மது அருந்துறாங்க பாட்டில அங்கேயே  வீசுறாங்க. காய்கறிக் கழிவுகள், மனிதக் கழிவுகள் எல்லாத்தையும் தூக்கி எறியுறாங்க. அவங்க வீட்டுக்குள்ள இப்படியா குப்பை போடுவாங்க அப்ப நாட்டுக்குள்ள ஏன் இவ்ளோ குப்பை போடுறாங்க.

யாரையும் புண் படுத்தும் நோக்கில் இதை எழுதவில்லை. ஆனால் மனதுக்கு கஷ்டமாக இருக்கு.
இந்த உலகம் நாம் அழகா வாழ்வதற்குத் தான். ஆனால் நம்மை மட்டும் அழகாக்கிக் கொண்டு நம் சுற்றுப்புறங்களை அசிங்கப்படுத்தலாமா??

நம்மாழ்வார் அய்யா தன்னோட உரையில ( எங்க ஊருக்கு நகர்மன்றத்துக்கு வந்திருந்தார். அவரைக் கடைசியாக அப்போ பார்த்ததோட அவர் இறப்புச் செய்தி தான் கிடைத்தது) நாம் வாழும் இந்த பூமி நம்ம முன்னோர்கள்ட்ட வாங்கின சொத்து இல்லை. நம்ம பின்னோர்கள்ட்ட வாங்கின கடன் நு சொன்னார். கடன் வாங்கிட்டு சரியா கொடுக்காம இருக்கிறதும் நம்ம தப்பு இல்லையா?
எங்களுக்குத் தான் காலைல தொடங்கின அறிவுரை ......அறிவுரை((??!!)), பள்ளிக்கூடத்துல , சாலையில நடக்கும் போது, டாக்டர் வக்கீல் என்று எந்த தொழில் செய்றவங்களும் எங்களுக்கு அறிவுரை சொல்றதை தங்களோட ஜென்ம பலனா வச்சுக்கிட்டு திரியுறாங்களே. அப்படியே தங்களுக்கு தாங்களே அறிவுரை சொல்லி குப்பைய குப்பைக் கூடையிலே போட்டு மத்த இடங்கள் குப்பையாகாமா பாது காப்பாங்களா///???
இவங்க இப்படி பண்ணினா நான் என்னத்தை சொல்ல??????
************************************************************************

3 comments:

  1. சுத்தம் சோறு போடும் என்று நீங்கள் எங்களுக்கு சொல்லித் தந்ததை வைத்துக் கணக்கிட்டுப் பார்த்தால் அது ஒரு ஊறுகாய் கூட உங்களுக்குத் தராது என்ற அளவில் தான் இந்த இடமே நாறடித்துக் காணப்படுகிறது.# வாவ்...

    ReplyDelete
  2. நல்ல பதிவு..
    வெற்றி பெற நல்வாழ்த்துகள்!..

    ReplyDelete
  3. அருமை
    வெற்றி பெற வாழ்த்துக்கள் சூர்யா

    ReplyDelete